அமெரிக்காவில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை ; விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடும் பனிப்புயலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை (பிப்ரவரி 23) நியூயார்க் மற்றும் நெவார்க் நகரங்களுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் இன்றும், நாளையும் கடுமையான பனிப்பொழிவு நிலவும் என்றும், பனிப்புயல் வீசுவதற்கான வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இரவு முதல் மணிக்கு 40 முதல் 56 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று காரணமாக கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நியூயார்க் மற்றும் நெவார்க் நகரங்களுக்கான விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயண உதவிகளை வழங்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதேபோல, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ்நிறுவனமும் பனிப்புயல் காரணமாகத் தனது விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பயணிகள் கூடுதல் கட்டணமின்றித் தங்களது பயணத் திட்டங்களை மாற்றிக்கொள்ள அந்நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement