தமிழக அமைச்சரவை கூட்டம்: 46 முதலீடுகளுக்கு ஒப்புதல்

1

சென்னை : தமிழக அமைச்சரவை கூட்டத்தில், 46 தொழில் நிறுவனங்களின், புதிய மற்றும் விரிவாக்க திட்ட முதலீடுகளுக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களை, விரிவாக்கம் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது:

தமிழக அமைச்சரவை கூட்டத்தில், புதிதாக நிறுவப்பட உள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட உள்ள, 46 முதலீட்டு திட்டங்களுக்கு, ஊக்க சலுகைகள் வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் வாயிலாக, 31,592 கோடி ரூபாய்க்கு, முதலீடுகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மாநிலம் முழுதும் பரவலான வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலுார், தேனி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், சேலம், கோவை, துாத்துக்குடி மாவட்டங்களில், இந்த முதலீடுகளும், விரிவாக்க திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

விமான உதிரிபாகங்கள், செமி கண்டக்டர், மின்னனுவியல் சாதனங்கள், மின்கலன்கள், மின் ஆற்றல் கருவிகள், விமான இயந்திரங்கள், குளிரூட்டப்பட்ட சாதனங்கள், கட்டுமான இயந்திர சாதனங்கள், கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதன்வாயிலாக அனைத்து பகுதிகளுக்கும், பரவலாக்கப்பட்ட வளர்ச்சி உறுதி செய்யப்படும். அங்குள்ள மக்கள், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை, முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement