கோடை விடுமுறை பயணம் ரயில்களில் முன்பதிவு துவக்கம்

சென்னை: கோடை விடுமுறையை யொட்டி, விரைவு ரயில்களில், 'டிக்கெட்' முன்பதிவு துவங்கி உள்ளது. தென் மாவட்ட விரைவு ரயில்களில், பயணியர் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

நடப்பு கல்வியாண்டின் இறுதி தேர்வுகள் அடுத்த மாதம் துவங்கி ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முடியும். அதுபோல், கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.

சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் வசிப்போர், சொந்த ஊர்களுக்கும், சிலர் சுற்றுலா இடங்களுக்கும் செல்வர். கோடை விடுமுறையில், ரயிலில் வெளியூர் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பொதுமக்கள், முன்பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், விரைவு ரயில்களில் 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், கோடை விடுமுறையையொட்டி அதிகமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, போக்குவரத்து அதிகமாக உள்ள தென்மாவட்ட விரைவு ரயில்களில், பயணியர் ஆர்வமாக முன்பதிவு செய்கின்றனர்.

சென்னை - திருச்செந்துார், கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, கொல்லம் உட்பட பெரும்பாலான விரைவு ரயில்களில், வரும் ஏப்., 24ம் தேதி பயணத்துக்கு முன்பதிவு முடிந்தே விட்டது.

வந்தே பாரத் உட்பட சில ரயில்களில் மட்டுமே கணிசமாக டிக்கெட்டுகள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் முன்பதிவு துவங்கும் போது, பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன.

அதிகமாக காத்திருப்பு பட்டியல் உள்ள ரயில்களில், வழித்தடத்தை தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்கான, அறிவிப்பு அடுத்த மாதம் இறுதியில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement