யாரு ஹீரோ?
ஜனநாயகத் திருவிழாவின் கதாநாயகன் யார்? மகுடம் சூடுபவர் அல்ல... மகுடத்தைத் தருபவரே! ஆம். வாக்காளர்கள்தான் இங்கே 'ஹீரோ'. இறுதி வாக்காளர் பட்டியல் படி, திருப்பூர் மாவட்டத்தில் தொகுதி வாரியான ஒரு பகுப்பாய்வு, இதோ, வாசகர்களுக்காக...
திருப்பூர் வடக்கு
முதன்முதலாக பெண்கள் 'மெஜாரிட்டி'
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதி, பல்லடம் தொகுதிக்கு அடுத்தபடியாக அதிக வாக்காளர்களை கொண்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்னதாக, தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை; நான்கு லட்சத்து, 7 ஆயிரத்து, 72 என்ற அளவில் இருந்தது. சிறப்பு தீவிர திருத்த பணி வாயிலாக, 58 ஆயிரத்து, 754 ஆண்கள்; 52 ஆயிரத்து, 252 பெண்கள்; 55 திருநங்கைகள் என, ஒரு லட்சத்து, 11 ஆயிரத்து, 61 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
மொத்த வாக்காளரில், இது, 27.3 சதவீதம். பின், வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து, 628 ஆண்கள்; ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து, 263 பெண்கள்; 120 திருநங்கைகள் என, இரண்டு லட்சத்து, 96 ஆயிரத்து, 11 வாக்காளர் இருந்தனர். நேற்று வெளியான இறுதிப்பட்டியலில், 6,723 ஆண்கள்; 7,399 பெண்கள், 5 திருநங்கைகள் என, 14 ஆயிரத்து, 127 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாளில் இருந்து, திருப்பூர் வடக்கில் ஆண் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; முதன் முதலாக, நேற்றைய இறுதி பட்டியலில், ஆண்களை காட்டிலும், பெண்கள் 'மெஜாரிட்டி' வாக்காளராக உயர்ந்துள்ளனர்; 5,311 பெண்கள் அதிகம் உள்ளனர்.
திருப்பூர் தெற்கு
நுாறு வயதை தாண்டிய 9 வாக்காளர்கள்
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன், இத்தொகுதியில் மொத்தம், 2,72,295 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணியில் 45,115 ஆண்கள்; 41,888 பெண்கள் மற்றும் திருநங்கையர் 8 பேர் என மொத்தம், 87,013 பேர் பெயர்கள் நீக்கப்பட்டன. அதன்படி 32 சதவீதம் பேர் நீக்கப்பட்டனர். வாக்காளர் வரைவு பட்டியலில், 90,679 ஆண்களும், 94,561 பெண்கள் மற்றும் 24 திருநங்கையர் என, 1,85,282 மொத்த வாக்காளர் எண்ணிக்கை இருந்தது.
நேற்று வெளியான இறுதிப் பட்டியலின்படி திருப்பூர் தெற்கு தொகுதியில், 94,579 ஆண் மற்றும் 99,011 பெண் மற்றும் 24 திருநங்கையர் என மொத்தம் 1,93,614 பேர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை உள்ளது.
புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக் கொண்ட 19 வயதுக்கு உட்பட்டோர் மொத்தம், 4229 பேர் உள்ளனர். மேலும், 20 முதல் 29 வயதுக்குள் 35,299 பேர்; 30 முதல் 39 வயதுக்குள் 38,143 பேர்; 40 முதல் 49 வயதுக்குள் 44,332 பேர்; 50 முதல் 59 வயது பிரிவில், 37,659 பேர்; 60 முதல் 69 வயதுக்குள் 22,113 பேர் உள்ளனர்.
மேலும், 70 முதல் 79 வயதுக்குள், 9505 பேர்; 80 முதல் 89 வயதுக்குள் 2150 பேர், 90 முதல் 99 வயதுக்குள் 175 பேர் மற்றும் 100 வயதுக்கு மேல் 9 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பல்லடம்
பெரிய தொகுதி சரியாத அந்தஸ்து
திருப்பூர் மாவட்ட அளவில், மாவட்டத்தின் பெரிய சட்டசபை தொகுதியாக பல்லடம் விளங்கி வந்தது. எஸ்.ஐ.ஆர். திருத்தப் பணிக்கு முன், பல்லடத்தில், 4 லட்சத்து 19 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின், 57,781 ஆண்கள்; 55,101 பெண்கள், 26 திருநங்கையர் உட்பட, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 907 பேர் நீக்கப்பட்டனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில், இது, 27 சதவீதம்.
நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி, 3 லட்சத்து 22 ஆயிரத்து 530 வாக்காளர்கள் உள்ளனர்; இதில், ஆண்கள், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 69 பேர்; பெண்கள், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 629 பேர். திருநங்கையர், 32 பேர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள், 12 ஆயிரம் அதிகம் உள்ளனர். வாக்காளர் எண்ணிக்கை சரிந்தும், மாவட்டத்தின் பெரிய தொகுதி என்ற அந்தஸ்தை பல்லடம் இழக்க வில்லை.
காங்கயம்
6180 வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு
காங்கயம் தொகுதியில், எஸ்.ஐ.ஆர். முன், இரண்டு லட்சத்து, 67 ஆயிரத்து, 926 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணி மூலம் இரட்டை பதிவு, இறந்த வாக்காளர்கள், இடம் பெயர்ந்தோர் உள்ளிட்ட காரணங்களால், 57 ஆயிரத்து, 460 பேர் நீக்கப்பட்டனர். வரைவு பட்டியலில், இரண்டு லட்சத்து, 10 ஆயிரத்து, 466 வாக்காளர் காங்கயம் தொகுதியில் இருந்தனர்.
நேற்று கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில், காங்கயம் தொகுதியில், இறுதி வாக்காளர் பட்டியலில், ஒரு லட்சத்து, 3,784 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 849 பெண் வாக்காளர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம், இரண்டு லட்சத்து, 16 ஆயிரத்து, 646 வாக்காளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, காங்கயம் தொகுதியில், 6180 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவிநாசி
மாவட்டத்தின் 3வது பெரிய தொகுதி
மாவட்டத்தின், 3வது பெரிய தொகுதியாக விளங்கும் அவிநாசி தொகுதியில், எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன், 2 லட்சத்து 96 ஆயிரத்து 817 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின், 28,100 ஆண்கள், 27,975 பெண்கள் உட்பட, 56,075 பேர் நீக்கப்பட்டனர். இது, 18.1 சதவீதம்
தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் படி, 2 லட்சத்து 50 ஆயிரத்து 346 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 841 பேர்; பெண்கள், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 496 பேர்; இந்த தொகுதியிலும் ஆண் வாக்காளரை விட பெண்கள் தான் அதிகம்.
உடுமலை
பெண் வாக்காளர்களை விட குறைந்த ஆண் வாக்காளர்கள்
உடுமலை சட்டசபை தொகுதியில், எஸ்.ஐ.ஆர்., பணிக்கு முன், 2 லட்சத்து 72 ஆயிரத்து 14 வாக்காளர்கள் இருந்தனர். இதில், 24,855 ஆண்கள், 26,836 பெண் வாக்காளர்கள், 9 திருநங்கையர் உட்பட, 51,700 பேர் நீக்கப்பட்டனர். இது, 19.1 சதவீதம்.
இறுதி பட்டியல் படி, 2 லட்சத்து 28 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 103 பேர். பெண்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 396 பேர். இந்த தொகுதியிலும், ஆண்களை விட பெண் வாக்காளர்கள், 10,000 பேர் வரை அதிகமாக உள்ளனர்.
மடத்துக்குளம்
சிறிய தொகுதியாக இப்போதும் நீடிப்பு
மாவட்டத்தில் உள்ள, 8 தொகுதிகளில் வாக்காளர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொகுதியாக, 7வது இடத்திற்கு மடத்துக்குளம் தள்ளப்பட்டுள்ளது. இங்கு, 2 லட்சத்து 43 ஆயிரத்து 478 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணியில், 18,487 ஆண்கள், 18,113 பெண் வாக்காளர்கள் உட்பட, 36,600 பேர் நீக்கப்பட்டனர். இது, 15 சதவீதம்.
இறுதிப் பட்டியல் படி, 2 லட்சத்து 12 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர்; இவர்களில், ஆண்கள், ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 309 பேர்; பெண்கள், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 417 வாக்காளர்கள் உள்ளனர். இங்கும், பெண் வாக்காளர்கள் அதிகம். எஸ்.ஐ.ஆர்., பணியில், 15 சதவீதம் பேர் தான் நீக்கப்பட்டனர் என்ற போதிலும், மாவட்டத்தின் சிறிய தொகுதிகளின் வரிசையில் மடத்துக்குளம் வந்திருக்கிறது.
தாராபுரம்
ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக 8 ஆயிரம் பெண்கள்
தாராபுரம் தொகுதியில், எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன், 2 லட்சத்து 66 ஆயிரத்து 127 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின், 24,862 ஆண்கள், 26,104 பெண்கள் உட்பட, 50,969 பேர் நீக்கப்பட்டனர்; இது, 19.15 சதவீதம்
தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் படி, 2 லட்சத்து 20 ஆயிரத்து 743 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 142 பேர்; பெண்கள், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 593 பேர்; 12 திருநங்கையர் உள்ளனர். இந்த தொகுதியிலும் ஆண் வாக்காளரை விட, பெண்கள், 8,000 பேர் அதிகம்.
மேலும்
-
நீலகிரியில் இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு: விற்பனை சந்தையை விரிவுபடுத்துவது அவசியம்
-
திருப்பூர் மருத்துவ கல்லுாரியில் கூடுதலாக 50 இடங்கள்
-
எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்கமாட்டேன்; ஓபிஎஸ் திட்டவட்டம்
-
24/02/2026 வெளியீடு 'தினமலர்' ஒரு நாளிதழ் மட்டுமல்ல...
-
சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு இன்றியமையாதது: பொது சிவில் சட்டத்துக்கு மோகன் பாகவத் ஆதரவு
-
கூட்டுறவு பணி நியமனத்தில் அலட்சியம்; தமிழக அரசு மீது அண்ணாமலை காட்டம்