24/02/2026 வெளியீடு 'தினமலர்' ஒரு நாளிதழ் மட்டுமல்ல...

தமிழ் பத்திரிகை உலகில், 'தினமலர்' என்பது ஒரு நாளிதழ் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறையின் சிந்தனை, ஒரு சமூகத்தின் விழிப்புணர்வு, ஒரு காலத்தின் வரலாறு.

தினமலர் தனது பயணத்தைத் துவங்கிய நாளிலிருந்து இன்று வரை, உண்மைச் செய்தி, நேர்மைக் கருத்து, தெளிவு கொண்ட எழுத்து என்ற மூன்று அடையாளங்களைத் தவறாமல் காத்து வருகிறது. அனைத்து துறைகள் பற்றியும் வாசகர்களுக்கு சரியான தகவல்களை, பொறுப்புடன் வழங்கும் ஊடகமாக தினமலர் தன்னை நிலைநிறுத்தி உள்ளது.

மாற்றம் அடையும் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியையும் சிறப்பாக ஏற்றுக்கொண்டு உள்ளது. அச்சு பதிப்புடன், இணையதளம், மொபைல் ஆப், சமூக ஊடகங்கள் என அனைத்து தளங்களிலும் தமிழை உயர்த்தி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களை இணைக்கும் பாலமாக திகழ்கிறது.

சாதாரண மக்களின் குரலையும், சமூக அநீதிகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதில் தினமலரின் பங்களிப்பு அளவிட முடியாதது. பல நேரங்களில் அரசியல் அழுத்தங்களையும் பொருட்படுத்தாமல் உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சல் தான் அதன் மிகப்பெரிய அடையாளம். வணிகம், தொழில் பற்றிய பக்கங்கள் தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக இருக்கிறன.

தினமலர் நாளிதழ் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக என் தந்தையார் நல்லையா அவர்கள் தொடர்ந்து வாசித்து, அதை தொடர்ந்து நானும் தினமும் வாசிக்காமல் இருந்ததில்லை. எங்களது நிறுவனமான 'கங்கா ஸ்வீட்ஸ்' கடந்த காலங்களில் தினமலரின் ஆதரவால் வளர்ச்சி அடைந்ததை நினைத்து பெருமைப்படுகிறோம். எங்களது வாசகமான 'நாவில் நடனமாடும் சுவைக்கு' என்ற தலைப்பு தினமலர் நாளிதழில் முதன்முதலில் வெளியாகி மிகவும் பிரபலம் அடைந்தது. அந்த வாசகமே இன்றும் எங்களது தாரக மந்திரமாக உள்ளது.

75 ஆண்டுகள் என்பது ஒரு சாதாரண காலம் அல்ல. இது ஒரு பாரம்பரியம். இது ஒரு பொறுப்பு. இந்த பொறுப்பை தினமலர் தொடர்ந்து சிறப்பாக செய்து வருவது தமிழ் மக்களின் பெருமையாகும். இனிவரும் காலங்களிலும், உண்மை, நேர்மை, சமூக பொறுப்பு என்ற மூன்று அடிப்படைகளையும் காத்து, தினமலர் இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே என் வாழ்த்தும் விருப்பமும்.



அன்புடன்,

ந. செந்தில் குமார்

நிர்வாக இயக்குனர், கங்கா ஸ்வீட்ஸ், சென்னை

Advertisement