எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்கமாட்டேன்; ஓபிஎஸ் திட்டவட்டம்

16

போடி; எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

அதிமுகவை யாராலும் வெல்லாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. கட்சியை காவல்தெய்வமாக இருந்து காத்தவர். 2001ல் அவருக்கு சோதனை வந்தபோது என்னை முதல்வர் பொறுப்பில் அவர் நியமித்தார். அவரின் கட்டளையை ஏற்று நிறைவாக பணியாற்றினேன்.

ஜெயலலிதா இல்லாத காலத்தில் நான் முதல்வர் பதவிக்கு வர விரும்பவில்லை என்று சொன்னேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவிக்கு என்னை ஒப்புக்கொள்ள வைத்தார்கள் என்பது தான் வரலாறு. முதல்வர் பதவி தந்த எனக்கு அதை அப்படியே திருப்பி தந்தேன் என்பது தான் வரலாறு.3ம் முறையாக கட்டாயத்தின் அடிப்படையில் முதல்வராக பொறுப்பேற்ற காலம். என்னுள் பல பிரச்னைகள்.

உயிரை கொடுத்து காப்பாற்றிய இந்த கட்சி இப்படி நிலைமைக்கு ஆளானது. எந்த ஒரு நிபந்தனையும் என்னிடம் இல்லை, கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று சொன்னது தவறா? ஒருங்கிணைப்பாளர், முதல்வர் பதவி என எதையும் நான் கேட்கவில்லை. 1980ம் ஆண்டில் இருந்து தற்போது வரை கட்சியில் உழைப்பால் உயர்ந்திருக்கிறேன். என் உழைப்பில் யாரும் இம்மிளயவு கூட குற்றம் சொல்லமுடியாது.

துணை முதல்வர் பதவி வேண்டாம் என்றுதான் சொன்னேன். ஆனால் பிரதமர் மோடி என்னை டில்லிக்கு அழைத்து, அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்று சொன்னதன் அடிப்படையில் ,இருந்தேன். ஆனால் அதற்குரிய மரியாதை ,இல்லை, அதையும் பொறுத்துக் கொண்டேன். என்னனென்ன அவமரியாதை செய்தார்காளோ அதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன்.

கடைசியில் கட்சியின் சட்ட விதிகளை மாற்றினார்கள் என்றும் போது தான் நான் எதிர்ப்பு தெரிவித்தேன், கோர்ட்டுக்கு போனேன். அந்த சட்ட போராட்டம் இன்னமும் நடந்து கொண்டு இருக்கிறது. எனக்கு ஒன்று ஒரு அரசியல் நிலையை நான் எடுக்க வேண்டுமா? வேண்டாமா? கோர்ட்டில் நான் அதிமுக வேட்டி கட்டக்கூடாது, கொடி கட்டக்கூடாது என்றார்கள். இதெல்லாம் இப்படி யார் செய்வார்கள்?

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்திருக்கிறேன், முதல்வராக இருந்திருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன் என்று மட்டும் தான் கேட்கிறேன். அதை மட்டும் சொல்லுங்கள், நான் அரசியலில் இருந்தே விலகிக் கொள்கிறேன். நான் ஏற்கனவே பலமுறை நான் நடத்தி வரும் கழகத்தின் கூட்டத்தில் எந்த நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று அறிவித்து இருக்கிறேன்.

அதிமுகவின் உரிமையை மீட்டெடுக்க தான் நான் கழகம் ஒன்றை தோற்றுவித்து இருக்கிறேன். நான் உறுப்பினர்களையே சேர்க்கவில்லை. இருப்பவர்களை வைத்துக் கொண்டு கோர்ட்டில் நான் சட்ட போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் 6 லோக்சபா தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது.

பண்ருட்டி ராமசந்திரன் என்னை தனிக்கட்சி ஆரம்பிக்குமாறு கடந்தாண்டே சொன்னார். ஆனால் நான் அதை மறுத்திருக்கிறேன். பன்னீர்செல்வத்தை ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று முட்டாள்தனமான ஐடியாவை யார் சொன்னது என்று அவர்(பண்ருட்டி ராமச்ந்திரனை குறிப்பிடுகிறார்) கேட்டார். பாஜ கூட்டணிக்கு ஆதரவு என்று அறிக்கை விடுங்க, நமக்கென்று ஒரு காலம் வரும் என்று அனைவரையும் அனுப்பிவிட்டார்.

லோக்சபா தேர்தலில் 38 இடங்களில் போட்டியிட்டு ஒரேயொரு இடம் மட்டுமே தான் ஜெயித்தது. ஒருத்தர் தான் (பெரியகுளம்) ஜெயித்து உள்ளார்.அவருக்கு அமைச்சர் பதவி தரலாம் என்று முடிவு செய்தார். அந்த விவரம் தெரிந்து என்னனென்ன கூத்து பண்ணினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். அது வரைக்கும் நான் பொறுமையாக தான் இருந்தேன். ஆனால் இப்போது பன்னீர்செல்வம் ஒரு நிலையை எடுக்க போகிறார் என்றவுடன் ஏன் அலறுகிறீர்கள்?

ஒவ்வொரு முறையும் 5 ஆண்டுகள் ஒரு அரசு நிறைவு பெறும் போது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் சபாநாயகரையும், முதல்வரையும் சந்தித்து வாழ்த்துக் கூறிவிட்டு தான் வருவார். அந்த அடிப்படையில் தான் முதல்வர் ஸ்டாலின்,சபாநாயகரை சந்தித்து நிறைவாக உள்ளது என்று பேசிவிட்டு வந்து விட்டேன்.

இன்றைக்கு கட்சி என்ன நிலையில் உள்ளது, பிளவுபட்டு உள்ளது, அது இணைய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். பன்னீர்செல்வத்துக்கு நான் எந்த கமிட்மெண்ட்டும் தரமாட்டேன், அவரை வந்து என்னை சந்தித்துவிட்டு செல்லுங்கள் என்று அமித் ஷா சொன்னார். எனவே அவரை சென்று சந்தித்துவிட்டு வந்தேன். அங்குள்ள அரசியல் நிலவரத்தை பேசினார், நானும் இங்குள்ள அரசியல் நிலவரத்தையும் பேசினேன்.

அவரே (அமித்ஷாவை குறிப்பிடுகிறார்) சொன்னார்... டிடிவி தினகரனுக்கு பாஜவுடன் சேர்ந்து 20 சீட்டு கொடுங்கள் போட்டியிடட்டும் என்று சொன்னார். ஆனால் இபிஎஸ் முடியாது என்று சொல்லிவிட்டார். 15 சீட் தருவீங்களான்னு என்று கேட்டார்... இபிஎஸ் முடியாது என்றார். 10 கேட்டார் அப்போதும் முடியாது என்றார்.

எத்தனை சீட் நின்றால் நீங்கள் (அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஜெயிப்பீர்கள் என்று அமித் ஷா கேட்டார். அவர் (இபிஎஸ்) 180 தொகுதிகள் என்றார். இதெல்லாம் நடந்தது 2021ல். அதன் பின்னர் திமுக ஆட்சி வந்தது. அந்த கூட்டணி இப்போதும் அவர் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். அந்த கூட்டணி பலமான கூட்டணியாக இருக்கிறது. அப்போது உறுதியாக அவர்கள் தான் ஜெயிப்பார்கள், நீங்கள் பிரிந்து கிடக்கிறீர்கள் எப்படி ஜெயிப்பீர்கள் என்று என்னிடம் கேட்டார்.

நான் இணைய வேண்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். இப்போது கூட்டணியில் இல்லை என்றாலும் நீங்கள் கூப்பிட்டதால் வந்து இருக்கிறேன். சின்னம்மா, டிடிவி ஆகியோர் நீங்கள் கூப்பிட்டால் வந்துவிடுவார்கள் என்று சொல்கிறீர்கள், கட்சியை இணைச்சு விடுங்கள் என்று நான் பெரிய கும்பிடு போட்டேன். பன்னீர்செல்வம் ஜி, நான் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறேன்.. இப்போதும் சொல்லி இருக்கிறேன் மறுபடியும் சொல்கிறேன், ஆனால் அவர் கேட்கவில்லை என்றார்.

இதற்கு பின்னர் நான் என்ன செய்ய முடியும்? நான் வேண்டும் என்றால் சங்கரமடத்தில் போய் சேர்ந்து கொள்ளட்டுமா? இவ்வளவு அநியாயம், அக்கிரமம் நடக்கிறது என்றபோது இன்னமும் இங்கேயே உட்கார்ந்து கொண்டு இருக்கும் பன்னீர்செல்வம் அரசியலில் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதை நீங்களே சொல்லிவிடுங்கள். திமுகவில் இணையபோவதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள்.

டிடிவி தினகரன் மீது நான் உச்சபட்ச மரியாதை வைத்திருக்கிறேன். அவர் பேசுவதற்கு மேலாக என்னாலும் பேச தெரியும். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி நான் பேசமாட்டேன்.

இவ்வாறு ஓபிஎஸ் பேட்டி அளித்தார்.

Advertisement