தனியார் வசமாகும் 26 விமான நிலையங்கள்

16

புதுடில்லி: நாடு முழுதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 26 விமான நிலையங்களின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை, தேசிய நிதி திரட்டும் திட்டம் 2.0வின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


என்.எம்.பி., எனப்படும் தேசிய நிதி திரட்டும் திட்டத்தை 2021ல் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் நோக்கம், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள அரசு சொத்துகளை விற்காமல் அவற்றின் மதிப்பை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதாகும்.


முதற்கட்ட திட்டத்துக்கு பின் தற்போது இதன் இரண்டாம் கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.




இந்நிலையில், விமான போக்குவரத்து அமைச்சகம் ஒ.எம்.டி.ஏ., எனப்படும் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு ஒப்பந்த அடிப்படையில், 26 விமானங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.



ஒ.எம்.டி.ஏ., ஒப்பந்தத்தின் கீழ், 2006ல் முதன் முதலில் டில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிறுவனங்கள் விமான நிலையங்களில், 'செக்- - இன் கவுன்டர்', பயணியர் காத்திருப்பு வளாக பராமரிப்பு, ரன் - வே பராமரிப்பு, கடைகள், உணவகங்கள், நவீன வசதிகள் சேர்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும்.




விமான நிலைய துறையில், 2026 - 30 வரை, 26 விமான நிலையங்களை தனியார் வசம் வழங்கி, 27,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 14,950 கோடி ரூபாய் விமான நிலையங்களை ஓ.எம்.டி.ஏ., முறையில் குத்தகை விடுவதன் வாயிலாகவும், 12,550 கோடி ரூபாயை பங்கு விற்பனை வாயிலாகவும் திரட்டப்படவுள்ளது.




இந்த 26 விமான நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக ஏலம் விடப்பட உள்ளன. முதற்கட்டமாக 11 விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்பட உள்ளன.

Advertisement