இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு; தேர்தலுக்கு பிறகு விசாரிக்கலாம் என்கிறது உச்சநீதிமன்றம்

20


புதுடில்லி: இலவச திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிப்பதற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கின் விசாரணையை, தேர்தலுக்குப் பிறகு விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தேர்தலுக்கு முன் இலவச திட்டங்களை, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அறிவிப்பதால், மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது. இலவச திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட ஆணையிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் இலவச வாக்குறுதிகளை அளிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "கேரளாவிலும் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்தனர். தற்போது, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை வேண்டியதில்லை. தேர்தல் முடிந்த பிறகு, இந்த வழக்கை விசாரித்துக் கொள்ளலாம்," என தெரிவித்தனர்.

Advertisement