ஆதரிக்க யாருமில்லை; தொகுதியிலும் செல்வாக்கில்லை; தனி மரமாக திமுகவுக்கு போனார் ஓபிஎஸ்

63


நமது நிருபர்

மூன்று முறை அதிமுகவில் முதல்வராக இருந்த ஓபிஎஸ், செல்வாக்கை முற்றிலும் இழந்து, தனி மரமாக, தன் மகனோடு திமுகவில் இணைந்திருப்பது, கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


விசுவாசம்





ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் ஓபிஎஸ். அவர் சிறை சென்றபோதும், பதவி வகிக்க முடியாத நிலையில் இருந்தபோதும், ஓபிஎஸ் இடம் தான் முதல்வர் பதவியை ஒப்படைத்தார். பணிவுக்கு பெயர் போன ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தினர் நிற்கச் சொன்ன இடத்தில் நிற்பதும், உட்கார் என்று சொன்னால் மட்டுமே உட்கார்வதுமாக இருந்து தன் விசுவாசத்தை காட்டினார்.


தர்மயுத்தம்





மூன்றாம் முறை அவர் முதல்வராக இருந்தபோது தான், சசிகலாவுக்கு பதவி ஆசை வந்து அவரை ராஜினாமா செய்ய வைத்தனர். ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு வந்தவர் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தியது வரலாறு. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி, அதில் தோல்வி வந்தவுடன் இபிஎஸ் உடன் சமரசம் செய்து கொண்டு துணை முதல்வர் பதவி பெற்றார்.


மகனுக்காக...





அதிலும், வளம் கொழிக்கும் சி.எம்.டி.ஏ., போன்ற துறைகளை கேட்டு பெற்றுக் கொண்டவர் ஓபிஎஸ். சந்தடி சாக்கில், தன் மகனுக்கு எம்.பி., சீட்டும் கேட்டு பெற்றுக் கொண்டார். இப்படி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், தனக்கான வாய்ப்புகளை பெற்றுக் கொண்ட ஓபிஎஸ் பற்றி, அவருடன் இருந்த ஆதரவாளர்கள் பலரும் காலப்போக்கில் புரிந்து கொண்டனர்.

ஒவ்வொருவராக, முகாம் மாறி இபிஎஸ் பக்கம் வந்து விட்டனர். தர்மயுத்தம் நடத்தியபோது, அவருடன் வந்த ஆதரவு எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள் ஒருவர் கூட, இப்போது அவருடன் இல்லை.

தனிமரம்





கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் கூட திமுகவில் சேர்ந்து விட்ட நிலையில், தனி மரமாக நின்றார் ஓபிஎஸ். முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற பெருமை இருந்தாலும், பெரியகுளம் தொகுதியில், கிணற்று நீர் கொடுக்க மறுக்கிறார் என்று கூறி, அவருக்கு எதிராக ஊர் மக்கள் போராட்டம் நடத்தியது வரலாறு.

அவரது மகன் தன்னை தவறான உறவுக்கு அழைக்கிறார் என்று ஒரு பெண் புகார் கொடுத்து பேட்டி கொடுத்தபோதும் ஓபிஎஸ் அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றார். இன்னும் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் தான் இருக்கிறது.

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட ஓபிஎஸ், அதிமுகவில் இனி இடமில்லை என்ற நிலையில், தன் மகனுடனும், இன்னும் சில பேருடனும் சென்று திமுகவில் சென்று இணைந்திருக்கிறார். தமிழக அரசியல், அவருக்கு எத்தகைய வழிகாட்டும் என்பதை வரக்கூடிய தேர்தல் முடிவுகள் சொல்லும் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.




இப்போது நல்லவர் ஆகி விட்டாரா?


முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து விட்டதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி தான் இந்த புகாரை அளித்தவர்.
ஓபிஎஸ் இப்போது திமுகவில் இணைந்து விட்ட நிலையில், அந்த புகார்கள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் இருந்தபோது, ஊழல்வாதியாக இருந்த ஓபிஎஸ், திமுகவில் இணைந்தவுடன் நல்லவராக மாறி விட்டாரா என்று, இணையத்தில் நெட்டிசன்கள் திமுகவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Advertisement