பிரதமரின் இஸ்ரேல் பயணம் ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய அரசு

5


புதுடில்லி: பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இந்தியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக நலன்களுக்கு ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கு 2 நாள் பயணமாக சென்ற பிரதமர் மோடி இன்று அதிகாலை நாடு திரும்பினார். இந்தப் பயணத்தின் போது, இந்தியா - இஸ்ரேல் இடையே ஏஐ, கல்வி, உற்பத்தி, கலாசாரம், கடல்சார் பாரம்பரியம், விவசாயம் உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இந்தப் பயணம் இந்தியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக நலன்களுக்கு ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.


இது குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது; பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பானது. பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்பெற்றுள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய துறைகளில் இஸ்ரேலுடன் இந்தியாவின் விரிவடைந்து வரும் கூட்டாண்மையை இந்தப் பயணம் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இருதரப்பு வர்த்தகம் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மாறிவரும் உலகப் பொருளாதாரச் சூழலில், வர்த்தக உறவுகளைப் பன்முகப்படுத்துவதிலும், மேற்கு ஆசியாவின் முக்கிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement