இந்தியாவில் 444 விமான சேவைகள் ரத்து; சர்வதேச விமான நிறுவனங்களின் சேவைகளும் நிறுத்தம்

1


புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். டிரம்ப் கூறியபடி கமேனியை கொன்று விட்டாலும், ஈரான் மீதான தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது. அதேபோல, ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.

அதேவேளையில், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மூலம் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போர் பிராந்தியத்தில் இருக்கும் நாடுகள் தங்களின் வான்வழிகளை மூடிவிட்டன. இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் முன்னணி விமான நிறுவனங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

நேற்று (பிப்ரவரி 28) மட்டும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று மற்றும் வர இருந்த 410 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், இன்றும் ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, ஏர் பிரான்ஸ், எத்திஹாட், எமிரேட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

பெய்ரூட், துபாய் மற்றும் ரியாத் உள்ளிட்ட நகரங்களுக்கான சேவையை ஏர் பிரான்ஸ் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. துபாய்க்கு வரும் மற்றும் அங்கிருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் நாளை பிற்பகல் வரை நிறுத்துவதாக எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வான்வழிகள் மூடப்பட்டதால், அபுதாபி விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும், நாளை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக எத்திஹாட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

அதேபோல, இன்றைய விமான சேவைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், நாளைய தினம் அடுத்தகட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்று கத்தார் விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement