மத்திய கிழக்கில் தொடரும் போர்; ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

1

டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்கள் 15 பேர் பணியாளர்களாக இருக்கும் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தும் தாக்குதல் காரணமாக, மத்திய கிழக்கு முழுவதும் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்த விவகாரத்தில் ஐநா உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வர ஆரம்பித்துள்ளன.

இந் நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் 15 இந்தியர்கள் பணியாளர்களாக இருக்கும் எண்ணெய் கப்பலான ஸ்கைலட் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. தாக்குதலுக்கு இலக்கான இந்த கப்பலில் 15 இந்தியர்களுடன், 5 ஈரானியர்களும் இருந்துள்ளனர்.

ஏவுகணை தாக்குதலில் 4 பணியாளர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், அனைவரும் மீட்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள், விடியோக்கள் வெளியாகி உள்ளன. கப்பலை யார் தாக்கினார்கள், எப்படி தாக்கினார்கள் என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியிடப்பட வில்லை.

ஓமன் கடற்கரை அருகில் நிகழ்ந்த இத்தாக்குதலால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. ஏவுகணைத் தாக்குதலை ஓமன் கடலோர பாதுகாப்பு மையம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தின் நீட்சியாக இந்த நீரிணையை ஈரான் அரசு மூடியது. இதையடுத்து, உலகின் முன்னணி எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் ஹோர்முஸ் நீரிணையின் வழியாக எரிபொருள் கப்பல்களை அனுப்புவதை நிறுத்தி வைத்தன. உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி தேவையில் 20 சதவீதம் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement