டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!

13

நமது டில்லி நிருபர்



டில்லிக்கு சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார். கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் நாளை பார்த்துக் கொள்ளலாம் என ஒரே வரியில் இபிஎஸ் பதிலளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.


தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜ, பாமக, தமாகா, அமமுக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்பட மேலும் சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது வரை தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த, அ.தி.மு.க., குழு அமைக்காதது, கூட்டணி கட்சிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இபிஎஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசினார். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் திடீரென டில்லி பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவர் பேசுவார் என வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.


டில்லி சென்ற இபிஎஸிடம் விமான நிலையத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார். கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் நாளை பார்த்துக் கொள்ளலாம் என பதில் அளித்தார். இதனால் தொகுதி பங்கீடு குறித்து இபிஎஸ் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisement