டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு

புதுடில்லி: டில்லியில் வாழும் பெண்களுக்கு நான்கு முக்கிய திட்டங்களை, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். அதில், முக்கியமானது பிங்க் நிற பொது போக்குவரத்து அட்டை திட்டம். இந்த திட்டத்தின் மூலம், டில்லியில் வாழும் பெண்கள், எந்த வித பொது போக்குவரத்து திட்டத்தையும் எளிதாக பயன்படுத்த முடியும்.


டில்லியில் , இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த விழாவில், மாநில அரசின் திட்டங்களை, ஜனாதிபதி திரவுபதி முர்மு துவக்கி வைத்தார். அதில் ஒன்றான, 'சஷாக்த் நாரி, சம்ரித் டில்லி' திட்டம் முக்கியமானதாகும். இந்த திட்டங்களை துவக்கி வைத்து, ஜனாதிபதி முர்மு பேசியதாவது:

பெண்களின் சுதந்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இலவச பஸ் பயணம் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாயிலாக, பெண்கள், இலவசமாக பஸ்களில் பயணம் செய்ய முடியும். அதுபோல, மெட்ரோ ரயிலிலும் பயணிக்க முடியும்.


மேலும், ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு, ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, தலா ஒரு சமையல் காஸ் சிலிண்டர், இலவசமாக வழங்கப்படும்.
மொத்தம், 129 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நல திட்டங்களுக்கான நிதிப் பலன்கள், பெண்களின் வங்கிக்கணக்குக்கிற்கு பணமாக மாற்றப்படும்.


மேலும், டில்லி லக்பதி பிடியா யோஜனா என்ற பெயரிலான திட்டம், 'மெரி பஞ்ஜி, மெரா அதிகாரி' என்ற திட்டமும், பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நான்கு திட்டங்களால் டில்லியில் வாழும் பெண்கள், முக்கிய முடிவுகளை தாங்களாகவே எடுக்க முடியும். அதனால் இந்த சமுதாயம் மற்றும் நாட்டிற்கு பலன் கிடைக்கும். மேலும், டில்லி பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரேகா குப்தா,''ஜனாதிபதி முர்முவால் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த நான்கு திட்டங்களும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுயச்சார்பு திட்டத்தை அடிப்படையாக கொண்டவை. ''குறிப்பாக, பெண்கள் பிறந்தது முதல், அவர்களின் கல்வியில் முதலீடு செய்யப்படுவதால், அவர்களுக்கு சுயசார்பு நிலை ஏற்பட்டு, அடுப்பாங்கரையிலிருந்து வெளியே வர முடியும்,'' என்றார்.


மேலும் அவர், ''முந்தைய அரசுகளும் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை துவக்கின. எனினும், ஏராளமான ஊழலால், அந்த திட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தன. இப்போது, பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிங்க் நிற அட்டை, வெறும் பயணத்திற்கான அனுமதிச் சீட்டு மட்டுமன்று, பெண்களின் மாண்பை உணர்த்தும் அட்டை,'' என்றார்.

Advertisement