திருப்பரங்குன்றம் தீபத்துாண் அருகே பூஜை செய்ய நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழுவை அனுமதிக்க வேண்டும்: அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

24


மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை மலை உச்சி தீபத்துாண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். இதுகுறித்த நிலைப்பாட்டை அரசு தரப்பில் நாளை மறுநாள்( மார்ச் 04) தெளிவுபடுத்த வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.


மதுரை மாவட்டம், ராம ரவிக்குமார், பரமசிவம், அரசுபாண்டி ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடங்களை தவிர, தீபத்துாணிலும் டிச., 3ல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, கடந்த ஆண்டு டிச., 1ல் உத்தரவிட்டார். ஆனால், ஏற்றவில்லை.


ராம ரவிக்குமார், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.


இதை அவசர வழக்காக, டிச., 3ல் விசாரித்த நீதிபதி, 'தீபத்துாணில் தீபம் ஏற்ற, பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என, உத்தரவிட்டார்.இதை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, டிச., 4ல் தள்ளுபடி செய்தது.இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். பிப்., 2ல் விசாரணைக்கு வந்த போது, மார்ச் 2ல் வழக்கு விசாரணைக்கு கலெக்டர் ஆஜராக உத்தரவிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இவ்வழக்கை விசாரித்தார். கலெக்டர் பிரவீன்குமார் ஆஜரானார்.

பரமசிவம் தாக்கல் செய்த இடையீட்டு மனு:
தமிழக அமைச்சர் ரகுபதி, ஜன., 6ல், 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி துாணில் தீபம் ஏற்றுவதை தடுக்கவே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படி செய்திருக்காவிடில் அங்கு தீபம் ஏற்றியிருப்பர். அப்படி நடந்திருந்தால் தீபம் ஏற்றுவது வழக்கமாகி விடும்' என, பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது, 'தினமலர்' நாளிதழில் ஜன., 7ல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இவ்வழக்கில் மற்றொரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தமிழக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர் கிரி, கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகினர்.


கலெக்டர் தாக்கல் செய்த பதில் மனு: நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கிறேன். திருப்பரங்குன்றத்தில் அதிகம் பேர் கூடினர். சட்டம் - ஒழுங்கு பிரச்னை, எதிர்பாராத நிகழ்வுகளை தடுக்கவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நீதிமன்றம் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. மலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லாத போது தான், கோவில் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலும்.


பி.என்.எஸ்.எஸ்., சட்டப்பிரிவு 163ன் கீழ் நான் பிறப்பித்த தடையுத்தரவு, இந்நீதிமன்றம் டிச., 1ல் பிறப்பித்த உத்தரவின்படி கோவில் அதிகாரிகள் தீபம் ஏற்றுவதை எவ்விதத்திலும் தடுக்கும் நோக்கத்தை கொண்டதாக இல்லை.தடை உத்தரவை பிறப்பித்ததால், நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறுவதாக இந்நீதிமன்றம் கண்டறிந்தால், நான் நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். டிச., 1ல் இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற எந்தவித தடையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை.இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.


நீதிபதி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கலெக்டர் படித்திருப்பார். ஏற்கனவே ஏற்றிய இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என, நான் உத்தரவிடவில்லை. ஹிந்துக்களுக்கு சொந்தமான பகுதியான மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் ஏற்ற உத்தரவு பிறப்பித்தேன். அதை நிறைவேற்ற விருப்பம் இல்லாமல் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு குறிப்பிட்டார்.


மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் கார்த்திகேய வெங்கடாஜலபதி, நிரஞ்சன் எஸ்.குமார்: திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம் குறித்து தமிழக முதல்வர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அமைச்சர் ரகுபதியும் அதுபோல் கூறியுள்ளார்.

வழக்கறிஞர் வீராகதிரவன்: 100 ஆண்டுகள் பாரம்பரியமாக ஏற்றப்படும் இடத்தில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. இச்சூழலில் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமா என கேள்வி எழுப்பப்பட்டதே தவிர, நீதிமன்ற உத்தரவு குறித்து முதல்வர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.


நீதிபதி: முதல்வரின் கருத்திலிருந்து அமைச்சரின் கருத்து மாறுபட்டது.

கலெக்டர்: அமைச்சரின் கருத்து தவறானது.

நீதிபதி: 5 பேர் மட்டும் மலை உச்சிக்கு சென்று 15 நிமிடம் பூஜை செய்ய அனுமதித்தால் போதுமானது. இவ்வழக்கை முடித்து வைக்க தயார். 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்படுகிறது. கலெக்டர் தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

கலெக்டர்: இது கோவிலுக்கு சொந்தமான சொத்து. அறநிலையத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அவகாசம் தேவை.இவ்வாறு விவாதம் நடந்தது.

பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்றம் நியமிக்கும், 5 பேர் கொண்ட குழுவை மலை உச்சி தீபத்துாண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். இது குறித்த நிலைப்பாட்டை மார்ச் 4ம் தேதி மாலை, 4:00 மணிக்கு அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும். நாளை, போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர், அறங்காவலர் ஆஜராக வேண்டும்.இவ்வழக்கில் வரும் காலங்களில் கலெக்டர் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அமைச்சர் ரகுபதியின் கருத்து தவறானது என, கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால் ரகுபதியை இவ்வழக்கில் மற்றொரு எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என தாக்கலான மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் பேட்டி




வழக்கு விசாரணைக்கு பிறகு ராமரவிக்குமார் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் நிருபர்களிடம் கூறியதாவது: கார்த்திகை தீபம் அன்றே தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான் வழக்கு. ஆனால் கார்த்திகை தீபம் முடிந்த நிலையில், கலெக்டர் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.


அதில் அவர் கூறியுள்ளதாவது: முழுமையாக நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். எந்தவிதமான தடையோ இடையூறோ ஏற்படுத்துவது நோக்கம் கிடையாது. உளவுத்துறையினர் கொடுத்த தகவல்களும், மதுரை போலீஸ் கமிஷனர் கூறியதன் அடிப்படையில் சூழ்நிலையும், சந்தர்பமும் அப்படி இருந்தது. அதனால் தான் 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். இல்லையென்றால் உத்தரவை அமல்படுத்துவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. முதல் ஆளாக நின்று இந்த உத்தரவை நிறைவேற்றி இருப்பேன் எனக்கூறியிருந்தார்.


இதனையடுத்து நீதிபதி, அப்படியானால் பிரமாணப் பத்திரத்தில் சொன்னது உண்மையாக இருப்பின், உங்கள் எண்ணம், நீதிமன்ற உத்தரவை முழுமையாக மதிப்பதாக இருந்தால், அதை காண்பிக்கும் வண்ணம், இப்போது நான் சொல்லக்கூடிய இந்த செயலை செய்ய நீங்கள் தயாரா எனக்கேட்டார்.


அதற்கு கலெக்டர் மவுனம் காத்தார்.

உடனே நீதிபதி,ஏன் பதில் சொல்லாமல் மவுனம் காக்கின்றீர்கள் என கேட்கும் போது,


அதற்கு கலெக்டர் ,' இல்லை நான் உயர் அதிகாரியிடம் கேட்க வேண்டும். மாவட்டம் தான் எனது கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலம் இல்லை.உயர் அதிகாரிகளிடம் கேட்க வேண்டும்' என விளக்கம் அளித்தார்.

நீதிபதி பதிவு



இதற்கு நீதிபதி, அப்போது நீங்கள் பிரமாணப் பத்திரத்தில் கூறியதற்கும், இப்போது சொல்லக்கூடிய வாசகத்துக்கும் முற்றிலும் வேறுபாடாக இருக்கிறதே. அன்றைக்கு 144 தடை உத்தரவு போடுவதற்கு சந்தர்பம், சூழ்நிலையும் காரணம் என்று சொன்னால் இன்று அந்த சூழ்நிலை இல்லை. அப்போதுஏன் முன்னெடுக்க மாட்டேன் என்கிறீர்கள் எனக்கேட்டபோது,


அதற்கு கலெக்டர் எனக்கு அதிகாரம் இல்லை. அறநிலையத்துறை தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பதில் சொன்னார். இது அனைத்தையும் நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

இது குறித்துமுடிவு செய்ய சம்பந்தப்பட்ட அனைவரும் நாளை மறுநாள் 4:30 மணிக்கு ஆஜராக வேண்டும் என கூறினார். விளக்கு கொடுத்து இருந்தாலும் இந்த விஷயம் குறித்து கருத்து கேட்டு உத்தரவு பிறப்பிக்க போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ன நாராயணன், கோவல் அறங்காவலர்கள் ஆஜராக வேண்டும் எனக்கூறியுள்ளார்.

கோவில் சொத்து



5 நபரை அனுப்ப முடியுமா என நீதிபதி கேட்டபோது தயக்கம் காட்டிய கலெக்டர், அறநிலையத்துறைதான் முடிவு எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, கோவில் சொத்து அனைத்தும் அறநிலையத்துறை சார்ந்தது கிடையாது. அது தவறான புரிதல், கோவிலை சார்ந்ததுதான். தீபம் ஏற்றுவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தாலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டு இருந்தாலும், இந்த உத்தரவு அத்துடன் நிற்கவில்லை. கோவில் சொத்துகளை பராமரிக்கவும் தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.


கோவில் சொத்து அறநிலையத்துறை தலையீட்டில் கீழ் முடிவெடுக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதற்காக அறங்காவலர்கள் ஆஜராக உத்தரவிட்டு உள்ளார். கோவில் நடக்கும் விஷயங்களை முடிவு அவர்கள் தான் எடுப்பார்கள்.



அனைத்து விசாரணையின்போது போதும் அரசு தரப்பு மன்னிப்பு கேட்கின்றனர். கலெக்டர் சார்பில் ஆஜரான தரப்பில் வழக்கறிஞர் கிரி கடந்த முறை தாக்கல் பிரமாண பத்திரத்தை நான் இறுதி செய்யவில்லை. சிறந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்கிறோம். தவறு என நீதிமன்றம் கருதும் பட்சத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்ற விளக்கத்தை கொடுத்தார். இன்றைய சூழ்நிலையில் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது தான் வழக்கம், வழக்கு விசாரணை நிலுவையில் இருந்ததால் உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை என்றார்.


நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் பிறப்பித்த பிறப்பித்த உத்தரவுக்கு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும். தீபத்தூணில் விளக்கு ஏற்றும் விஷயத்துக்கு இவ்வளவு தடை ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அரசு தான் இதற்கு பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement