குடும்பச்சூழல் பற்றி கேட்டறிந்த பிரதமர் மோடி: மதுரை பூரணச்சந்திரன் மனைவி உருக்கம்

13

மதுரை: எனது கணவர் பூர்ணசந்திரன் உயிர்த்தியாகத்திற்கு பிரதமர் மோடி அளித்த மரியாதை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது மனைவி இந்துமதி கூறியுள்ளார்.

மதுரைக்கு நேற்று வந்த பிரதமர் மோடி ரூ.4.400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது, பூர்ணசந்திரன் (திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்தவர்) குடும்பத்தை பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந் நிலையில் பிரதமர் மோடி தங்களிடம் என்ன பேசினார் என்பது குறித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் மனைவி இந்துமதி கூறியிருப்பதாவது; என் கணவர் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற தன்னுடைய உயிரை தீபமாக ஏற்றி உள்ளார். அவரின் உயிர்த்தியாகம் வீண் போகாமல் இருக்க வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும்.

பிரதமர் மோடி என் கணவர் பூர்ணசந்திரன் பற்றி சிறப்பாக பேசினார். என்னிடமும், என் குழந்தைகளிடமும் நலன் விசாரித்தார். குடும்பச்சூழல் குறித்து கேட்டறிந்தார். உதவி செய்கிறோம், உங்களின் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியை (பிரதமர் மோடி பூர்ணசந்திரன் பெயரை உச்சரித்த நிகழ்வை குறிப்பிடுகிறார்) பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் பெயர், எங்கள் குடும்பத்தினரின் பெயர்களை சொல்லி அவர் (பிரதமர் மோடி) இந்த அளவு பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை.

என் கணவர் செய்த உயிர்த்தியாகத்திற்கு ரொம்ப மரியாதை கொடுத்தது போல் இருக்கிறது. இந்த மரியாதைக்காக சந்தோஷப்படுவதா இல்லை, எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு எங்களுக்கு மரியாதை அளித்ததற்கு ரொம்பவும் நன்றி. கணவர் இறந்த பின்னர் ரொம்பவும் மன உளைச்சலில் இருந்தோம். நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி பாஜவுக்கும், எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

எங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்தனர். என்னை தந்தை வடிவத்தில், ஸ்தானத்தில் இருந்து நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறி இருக்கின்றனர். ஆர்எஸ்எஸ், பாஜவில் இருந்து நிறைய பேர், என் கணவர் இறந்தததில் இருந்து தினமும் வருவார்கள், என் கணவர் போட்டோவுக்கு மாலையிட்டு மரியாதை செய்வார்கள். எதுவும் இல்லாதது போல் இருந்த எங்களிடம் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம் என்று தைரியம் கொடுத்துள்ளனர்.

என் கணவர் திமுக குடும்பமாக தான் இருந்தாங்க.. ஆனால் ஏரியா கவுன்சிலர் கூட எங்களை சந்தித்து பேசவில்லை. ஆனால் பிரதமர் பார்க்க எத்தனையோ கோடி மக்கள் இருக்கின்றனர். முதல்வர், மற்ற அமைச்சர்கள் எல்லாம் இருக்கின்றனர்.

ஆனால் முதல்முறையாக எங்களை வந்து பார்த்து, பிள்ளைகளை பார்த்து விசாரித்துவிட்டு நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னது எங்கள் குடும்பத்திற்கும்,எனக்கும் ஆறுதலாக இருக்கிறது. பிரதமர் மோடிக்கு ரொம்பவும் நன்றி.

இவ்வாறு பூர்ணசந்திரன் மனைவி இந்துமதி கூறினார்.

Advertisement