டெக்சாஸ் துப்பாக்கிச்சூட்டில் தமிழக மாணவி பலி

7


நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், தமிழக மாணவி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இது, பயங்கரவாதிகளின் கைவரிசை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்துக்கு உட்பட்டது ஆஸ்டின் நகரம். இங்குள்ள மது பான விடுதியில் 2 நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், படுகாயம் அடைந்த மூவர் அன்று உயிரிழந்தனர். காயம் அடைந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

உயிரிழந்த நால்வரில் ஒருவர் 21 வயது இந்திய மாணவி சவிதா சண்முகசுந்தரம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டம் அதிகமாக இருந்த பொழுதுபோக்கு பகுதியில், திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சம்பவம் பற்றி விசாரித்த போலீசார், பயங்கரவாதிகளின் கைவரிசையாக இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர்.



உயிரிழந்த மாணவி சவிதா, இன்னும் ஒரு சில மாதங்களில் தன் பட்டப்படிப்பை நிறைவு செய்ய இருந்தார் என்றும், பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரட்டை பட்டப்படிப்புகளை படித்து வந்தார் என்றும் பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஆஸ்டின் மெக்கோம்ப்ஸ் வணிக கல்லுாரியில் படித்த இம்மாணவி, படிப்பில் சிறந்து விளங்கினார் என்றும், சூப்பர்ஸ்டார் மாணவி என்று பெயர் எடுத்தவர் என்றும் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement