துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு

9

மும்பை: துபாயில் சிக்கி தவித்த இந்தியர்களில் முதல் குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்து சேர்ந்தனர்.

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறி வைக்க போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.

போர் நீடித்து வரும் சூழலில், மத்திய கிழக்கு நாடுகளில் விமான சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள ஏராளமான இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்கும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது.

அதன் முக்கிய கட்டமாக, துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்களின் ஒரு குழுவினர் விமானம் மூலம் பத்திரமாக மும்பை வந்து இறங்கினர். விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய விசாகா என்ற பெண்மணி, துபாயில் இருக்கும் போது மிகவும் பயமாக இருந்தது. தற்போது சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டோம் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுடன் அங்கு (துபாய்) மொத்தம் 580 பேர் இருந்தனர். அனைவரும் வெவ்வேறு விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர் என்று கூறினார்.

Advertisement