வருமானத்தை மறைத்த ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை; ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்

16

சென்னை: ஆதாரங்களின் அடிப்படையில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வருமானவரித்துறை உறுதி அளித்துள்ளது.

ராமநாதபுரம் லோக்சபா எம்.பி.யாக இருப்பவர் நவாஸ் கனி. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர். '2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை ஒப்பிட்டால் வருமானத்தை மறைத்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த வருமானவரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று வெங்கடாஜலபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பதிலளித்த வருமானவரித் துறையானது, 'வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக' கூறியது. இதையடுத்து, வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வு கூறியதாவது;

குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? நவாஸ் கனியின் வருமானத்தில் எவ்வாறு இவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்டது? 2019-2014ம் ஆண்டு காலகட்டத்தில் 39.24 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக எந்த அடிப்படையில் கணக்கு காட்டப்பட்டது?

பிரமாணப்பத்திரத்தில் இருந்து சுமார் 18 கோடி ரூபாய் வித்தியாசம் வருகிறது. ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. எனவே வருமான வரித்துறையானது நவாஸ்கனியின் வருமான விவரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Advertisement