கமேனி இருக்குமிடம் சிஐஏ கண்டறிந்தது எப்படி?

11

லண்டன்: ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி, அமெரிக்கா- இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவர் இருப்பிடம் கண்டறிந்தது எப்படி என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன.


தன் உயிருக்கு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் உளவுப்படையால் ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்திருந்த கமேனி, மிகவும் கவனமாக இருந்தார். எப்போது, எங்கே இருப்பார் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்களை தவிர யாருக்கும் தெரியாது. தங்குமிடமும் ரகசியமாக இருந்தது. சில ஆண்டுகளாக அவர் குண்டு துளைக்க முடியாத பங்கர்களில் வசிப்பதாகவே நாடு முழுவதும் பேச்சு இருந்தது.


அப்படிப்பட்ட நிலையிலும், மிகச்சரியாக குண்டு வீசி, கமேனியை கொன்று விட்டனர், அமெரிக்க, இஸ்ரேலிய படையினர். இது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்கின்றனர், உளவுத்துறை ஆய்வாளர்கள்.


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களில் இருக்கும் கேமராக்களும் இஸ்ரேலிய உளவுத்துறையால் ஹேக்கிங் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் இஸ்ரேலில் இருக்கும் சர்வரில் சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டன.


கமேனியின் பாதுகாவலர்கள் வருகை, செயல்பாடு முழுவதும் இஸ்ரேல், சிஐஏ., உளவுத்துறை கண்காணிப்பிலேயே இருந்தன. இது மட்டுமின்றி, ஈரான் மொபைல் போன் நெட்வொர்க்கிலும் இஸ்ரேலிய உளவுத்துறையினர் ஊடுருவி இருந்தனர்.


இப்படி, சேகரித்த உளவுத்தகவல் அடிப்படையில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் ஆலோசனையில் கமேனி பங்கேற்கிறார் என்று இஸ்ரேலின் உளவு அமைப்பு மொசாத் உறுதி செய்து விட்டது.


ஈரானில் இருந்த சி.ஐ.ஏ., உளவாளி ஒருவரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இதையடுத்து அரசியல் மட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. முன்னதாக, இணையத்தாக்குதல் நடத்தி ஈரான் ரேடார் கண்காணிப்பு சாதனங்கள் முடக்கப்பட்டன.



குறிப்பிட்ட அந்த வளாகம் மீது, இஸ்ரேலிய போர் விமானங்கள், 30 துல்லிய குண்டுகளை வீசி தரை மட்டமாக்கின. இதில் தான் கமேனி மற்றும் முன்னணி தலைவர்கள் பலியாகினர். பகல் நேரத்தில் நடத்திய தாக்குதல் என்பதால், கூடுதல் வசதியாக இருந்தது என்றும் கூறியிருக்கின்றனர் இஸ்ரேல் ராணுவத்தினர்.

Advertisement