பெட்ரோல், டீசல் விலை உயராது!

7

புதுடில்லி: '' 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. உடனடியாக பெட்ரோல், டீசல் நிலையில் மாற்றம் இருக்காது,'' என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 3வது நாளை கடந்துள்ளது. உலக கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தில் 20 சதவீதம் ஈரானுக்கு அருகில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது.


ஈரான் மட்டும் அல்லாமல், ஈரானுக்கு ஆதரவாக உள்ள லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், இந்தப் பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு காப்பீடு வழங்க நிறுவனங்கள் தயங்குகின்றன. இதனால், இந்த ஜலசந்தி வழியாக செல்வதற்கு பல டேங்கர்கள் மற்றும் கன்டெய்னர் கப்பல்கள் தயங்குவதால் எண்ணெய் போக்குவரத்து தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.


இதன் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் இருந்து கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படக்கூடும் என வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இதனால், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறித்து கவலை எழுந்தது.


இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவிடம் 25 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு எண்ணெய் கையிருப்பு உள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி, எல்என்ஜி எரிவாயுவை வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தற்போதைக் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் ஏதும் இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


உறுதி
இதனிடையே, இந்தியாவின் எரிசக்தி சப்ளை பாதுகாப்பாக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: குறுகிய காலத்திற்கு ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணெய் இறக்குமதியை பல நாடுகளில் இருந்து செய்துவருகிறது. மாற்று வழிகளில் பல எரிசக்தி விநியோகம் நடக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மட்டும் நம்பியிரக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எரிசக்தி விநியோகம் மற்றும் தேவை குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்கு 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.
எனவே தற்போதைய நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் நிலைஉயர வாய்ப்பு இல்லை. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே இதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

விவரம் கேட்கிறது ஏஏஐ



இதனிடையே,கையிருப்பில் உள்ள எரிபொருளின் அளவு மற்றும் அடுத்த7 நாட்களுக்கு தேவையான அளவு குறித்து விமான நிலையங்களிடம் இந்திய விமானபோக்குவரத்து ஆணையரகம் விளக்கம் (ஏஏஐ) கேட்டு உள்ளது.

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, இந்த விளக்கத்தை ஏஏஐ கேட்டு உள்ளதாகவும், சர்வதேச விமானநிலையங்களில் எரிபொருள் சப்ளை குறித்த விவரங்களை தெரிந்து கொள்வதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement