தமிழக விவசாயிகள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்: அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், காரமடையில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

அத்திக்கடவு --- அவிநாசி திட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை மேற்கு பகுதியில் இருந்து துவங்க இருந்தது. ஆனால், தமிழக அரசு காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து திட்டத்தை துவக்கியது.

திட்டத்தில், மேட்டுப்பாளையம், காரமடை, பவானிசாகர், அன்னுார், பெரியநாயக்கன்பாளையம், கோவில்பாளையம்ஆகிய பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன. இப்பகுதிகளை, அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிலை இரண்டில் சேர்த்து, திட்டம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும், அத்திக்கடவு அவிநாசி இரண்டாவது திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவோம் என, தங்களது தேர்தல் அறிக்கையில் கொண்டு வர வேண்டும்.

இது சம்பந்தமான அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காரமடையில் 7ம் தேதி (இன்று) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில், அனைத்து விவசாயிகள், பொதுமக்கள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என, சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement