சில நாடுகள் மட்டுமே உலகை ஆளும் காலம் முடிந்துவிட்டது; சொல்கிறார் ஜெய்சங்கர்

10

புதுடில்லி: 'குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே உலகை ஆளம் காலம் முடிந்துவிட்டது. பல நாடுகள் அதிகார மையங்களாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது,' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது;

கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் செயல்பாடுகள், சர்வதேச அரங்கில் வளரும் நாடு என்னும் தாக்கத்தை வெளிக்காட்டியது. பெருந்தொற்று சமயத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு தடுப்பூசி வழங்கியது. அதுமட்டுமில்லாமல், பிற வளரும் நாடுகளுக்கும் தடுப்பூசிகளை அனுப்பவும் முன்வந்தது. வளரும் நாடு என்பது வெறும் வார்த்தை அல்ல, அது நமக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டியது.

முன்பு கலாசாரம், அரசியல் மற்றும் உத்திகளின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக இருந்த வளர்ந்த நாடுகள், தற்போது தங்களுக்குள் வேறுபாடுகளைக் காட்டத் துவங்கியுள்ளன.

சர்வதேச அரசியல் இனி ஒரு சில சக்திவாய்ந்த நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லை. பல நாடுகள் அதிகார மையங்களாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட தேவை மற்றும் விவகாரங்களுக்காக மட்டும் தற்காலிகமாக கூட்டண்மையை நாடுகள் உருவாக்கும்.

ஒரு சில நாடுகள் ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டு, பிற நாடுகள் அதற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்ற பழைய நடைமுறைக்கு, உலகம் இனி திரும்பாது, சர்வதேச ஒத்துழைப்பு என்பது தற்போதைய அதிகாரப் பரவலுக்கு ஏற்ப மாற வேண்டுமே தவிர, அதை எதிர்க்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement