தமிழக அணி சாம்பியன் * சி.கே.நாயுடு டிராபியில்...

திண்டுக்கல்: சி.கே.நாயுடு டிராபி தொடரில் தமிழக அணி சாம்பியன் ஆனது. பைனலில் 7 விக்கெட்டில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சி.கே.நாயுடு கோப்பை (23 வயது, நான்கு நாள்) தொடர் நடத்தப்படுகிறது. 'சி' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி, லீக் சுற்று முடிவில் 7 போட்டியில் 5 வெற்றி, 2 'டிரா' செய்து, 84 புள்ளியுடன் இரண்டாவது இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது.
இதில் பஞ்சாப்பை வென்றது. அடுத்து அரையிறுதியில் சத்தீஷ்கரை வீழ்த்தியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் பைனல் நடந்தது. தமிழகம், மகாராஷ்டிரா அணிகள் மோதின.
முதல் இன்னிங்சில் மகாராஷ்டிரா 238 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் தமிழக அணி, முதல் இன்னிங்சில் 309/8 ரன் எடுத்திருந்தது.
சுருண்டது மகாராஷ்டிரா
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தமிழக அணி முதல் இன்னிங்சில் 334 ரன்னில் ஆல் அவுட்டாகி, 96 ரன் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் மகாராஷ்டிரா அணி 161 ரன்னில் சுருண்டது. தமிழகத்தின் சச்சின் ரதி, விக்னேஷ் தலா 3 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து, இரண்டாவது இன்னிங்சில் 66 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது தமிழக அணி. மாதவ பிரசாத் (9), சந்தோஷ் (8), கிரண் (14) ஏமாற்றிய போதும், தமிழக அணி 20 ஓவரில் 67/3 ரன் எடுத்து, 7 விக்கெட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியபட்டியை சேர்ந்த கேப்டன் பூபதி வைஷ்ண குமார் (5), ஆதிஷ் (27) அவுட்டாகாமல் இருந்தனர். கிரண் (14+86 ரன்) ஆட்டநாயகன் ஆனார்.

இரண்டு கோப்பை

கடந்த ஆண்டு டிசம்பரில், சி.கே.நாயுடு 'ஸ்டேட் டிராபி' (50 ஓவர்) தொடர் நடந்தது. மும்பையில் நடந்த பைனலில் பூபதி வைஷ்ண குமார் தலைமையிலான தமிழக அணி, உ.பி., யை சாய்த்து, சாம்பியன் ஆனது.
தற்போது, சி.கே.நாயுடு டிராபி, நான்கு நாள் தொடரில், பூபதி தலைமையில் மீண்டும் அசத்திய தமிழக அணி, அடுத்தடுத்து இரண்டு கோப்பை கைப்பற்றியது.

தொடர் நாயகன் சச்சின்
சி.கே.நாயுடு தொடரில் 10 போட்டியில் 55 விக்கெட் சாய்த்த தமிழக சுழற்பந்து வீச்சாளர் சச்சின் ரதி, தொடர் நாயகன் ஆனார். தமிழகத்தின் விக்னேஷ் (44) 2வது இடம் பெற்றார்.
பேட்டிங்கில் தமிழக வீரர்கள் கிரண் கார்த்திகேயன் (9ல் 634 ரன்), அமித் சாத்விக் (8ல் 553), மானவ் (10ல் 428), மாதவ பிரசாத் (10ல் 415), ஜெயந்த் (10ல் 412), கேப்டன் பூபதி வைஷ்ண குமார் (10ல் 395) கைகொடுத்தனர்.

Advertisement