செக் மோசடி வழக்கில் தண்டனை உறுதி போஸ்ட்மேன் சிறையில் அடைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் செக் மோசடி வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற போஸ்ட்மேன் குருசாமியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தண்டனை உறுதியானதை அடுத்து மதுரை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நாச்சியார்பட்டியை சேர்ந்தவர் நாகஜோதி 45. இவரிடம் அதே ஊரில் உள்ள போஸ்ட் ஆபீஸில் பணிபுரிந்த போஸ்ட்மேன் குருசாமி 51 என்பவர் 2014ல் ரூ.17 லட்சத்தை கைமாற்று கடனாக பெற்றார். ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்துள்ளார். நாகஜோதி ஒரு மாதம் கழித்து கடன் தொகையை கேட்ட போது குருசாமி தனது வங்கி கணக்கின் 4 செக்குகளை கொடுத்துள்ளார்.

இதை நாகஜோதி வங்கியில் செலுத்தியபோது போதிய பணம் இல்லாமல் செக்குகள் ரிட்டர்ன் ஆனது.

இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நாகஜோதி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் குருசாமிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து 2019ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குருசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. 2025 நவம்பரில் குருசாமியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தண்டனையை நிறைவேற்ற உத்தவிட்டது. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் குருசாமியை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement