காங்., எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் குண்டு வீச்சு

காரைக்குடி: சிவகங்கை தொகுதி காங்., எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் கார்த்தி எம்.பி., அலுவலகம் உள்ளது. எம்.பி., அலுவலக ஊழியர்கள் நேற்று காலை வழக்கம் போல் அலுவலகத்தை திறந்தனர். அப்போது வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாங்குடி எம்.எல்.ஏ., மற்றும் காங்., கட்சியினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. கட்சியினர் போலீசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து எஸ்.பி.,சிவபிரசாத் ஆய்வு செய்தார்.

ஆதரவாளர்கள் சந்தேகம் தி.மு.க., தனது கூட்டணியில் காங்., கட்சியை சேர்ப்பதற்கு பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. அதோடு கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் நீண்ட நாட்கள் இழுத்தடித்தது. இதனால் த.வெ.க., உடன் காங்., கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனால், இளைஞர்கள் உட்பட பெரும்பாலான காங்., தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் மகனுக்கு எம்.பி., மற்றும் ஆதராவாளர்களுக்கு எம்.எல்.ஏ., சீட் கிடைக்காது என்ற அச்சத்தில் சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தி தி.மு.க., கூட்டணியை உறுதி செய்ததாக பலர் அவரை விமர்சித்தனர்.

கூட்டணி முடிவால் விரக்தி அடைந்த தொண்டர்கள் சிலர் கார்த்தி எம்.பி., அலுவலகத்தில் குண்டு வீசி இருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

காங்., நிர்வாகிகள் கூறியதாவது:

கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த பிரச்னையும் இல்லை. தொகுதி பங்கீட்டிலும் பிரச்னை இருக்காது. கூட்டணி சுமுகமாக செல்கிறது. காங்.,தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

போலீஸ் விசாரணைக்கு பிறகு குண்டு வீசியது யார் என தெரியவரும் என்றனர்.

போலீசார் கூறியதாவது: எம்.பி., அலுவலகத்தில் வீசப்பட்டது பெட்ரோல் குண்டு அல்ல. மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட குண்டு. அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. விசாரணையில் இதில் ஈடுபட்டது யார் என கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

எம்.பி., அலுவலகத்திற்கே பாதுகாப்பு இல்லை. இந்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement