பசவேஸ்வரா - மாரம்மா கோவிலில் கொள்ளை

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டுலுபேட் தாலுகா, பரகி கிராமத்தில் பசவேஸ்வரா - மாரம்மா கோவில் உள்ளது. மூன்று நாட்களுக்கு முன்னர் தான், இக்கோவிலில் திருவிழா நடந்து முடிந்தது. திருவிழா என்பதால், சுவாமி விக்ரகங்களுக்கு தங்க நகைகள் அணிவித்திருந்தனர்.

நேற்று அதிகாலை கோவிலுக்கு வந்த மர்மகும்பல், பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது. நான்கு கிலோ வெள்ளி பொருட்கள், 30 கிராம் தங்கநகைகளை திருடிக்கொண்டு தப்பியோடியது. கொள்ளையடிப்பதற்கு முன், கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்களை திருடிச் சென்றுள்ளனர்.

காலையில் அர்ச்சகர் கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பது தெரிந்து, போலீசாரிடம் புகார் அளித்தனர்.

போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் தான், குண்டுலுபேட் தாலுகாவின், ஆறு கோவில்களில் திருட்டு நடந்தது.

இப்போது, பசவேஸ்வரா - மாரம்மா கோவிலில் திருட்டு நடந்திருப்பதால், கிராமத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement