11 இடங்களில் சோதனைச்சாவடி தர்மபுரி மாவட்டத்தில் அமைப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்., 23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இது தேர்தல் முடியும் வரை நீடிக்கும். உரிய ஆவணங்களின்றி ஒரு நபர், 50,000 ரூபாக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. வணிகர்கள் அல்லது அவசர தேவைக்கு கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ரசீது அல்லது வங்கி ஆவணங்களை கையோடு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பணம் மற்றும் பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொண்டு செல்வதை தடுக்க, மாவட்ட தேர்தல் அலுவலரின் அறிவுறுத்தல் படி, தொப்பூர், திப்பம்பட்டி, அனுமந்தீர்த்தம், நரிபள்ளி, கோம்பூர், ராம்மூர்த்தி நகர், பெரும்பாலை, மடம், கும்பாரஹள்ளி, காடுசெட்டிபட்டி, நாய்குந்தி என, 11 இடங்களில் நிலையான சோதனை சாவடிகளில் போலீசார் சுழற்சி முறையிலும், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement