'ஏஐ' தொழில்நுட்ப விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

கிருஷ்ணகிரி: “ஏ.ஐ., விளம்பரங்களில் தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாடு, குறுந்தகவல்கள் அனுப்ப அனுமதி பெற வேண்டும்,” என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: தமிழத்தில் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் ஆணையம் இதற்காக பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், தலைவர்கள் சிலை மறைக்கும் பணியும் நடந்து வருகிறது.

எஸ்.ஐ.ஆர்., வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகளுக்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்கியது போல், தேர்தல் முடியும் வரை அனைத்து கட்சியினரும் விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வளர்ந்துள்ள ஏ.ஐ., தொழில்நுட்பம், தேர்தல் நேர அச்சுறுத்தலாக இருக்கிறது என, தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஏ.ஐ., தொழில்நுட்ப விளம்பரங்களில், தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். மொத்த குறுந்தகவல்களை அனுப்ப அனுமதியும் பெற வேண்டும். போலி வீடியோக்களை ஏ.ஐ., மூலம் அனுப்புவது, தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியின்றி சமூக ஊடகங்களில் பிரசார நோக்கில் குறுந்தகவல்களை பரப்பினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement