தொகுதி பங்கீடு; திமுக- மார்க்சிஸ்ட் இடையே நீடிக்கும் இழுபறி

19

சென்னை: கூடுதல் தொகுதியை பெறுவதில் நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். கடந்த முறையை விட அதிக தொகுதிகளில் போட்டியிடுவதால் உறுதியாக இருக்கிறோம் என மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். திமுக- மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சு தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.



சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சு நடந்தது. பிறகு நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது:

தமிழகத்திற்கு போதுமான அவகாசம் உள்ளது. அடுத்து ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு தொடர்பாக அனைத்தும் நிறைவு பெறும் என்று கருதுகிறோம். கடந்த முறையை விட குறைவான தொகுதியை பெற்றுக்கொள்ளுமாறு திமுக குழுவினர் கேட்டு கொண்டனர். கடந்த காலத்தில் போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதியில் போட்டியிட வேண்டும்; அதற்கு தகுந்தபடி அதிக தொகுதிகளை தர வேண்டும் என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம்.


கட்சி தலைவரிடம் பேச்சுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளனர். நிறைய கட்சிகள் இருக்கும் போது இந்த மாதிரியான நிலை தவிர்க்க முடியாது, அதனை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கட்சிக்கான கூடுதல் தொகுதியை பெறுவதில் நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வோம். இவ்வாறு சண்முகம் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதி வழங்கியதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் சண்முகம் தெரிவித்தார்.

Advertisement