'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '

கோவை: சர்க்கரை, உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு மருந்து சாப்பிடுவோர், பல் ஈறுகளை பரிசோதிப்பது அவசியம் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பற்களை தாங்கும் எலும்புகள், ஈறுகள் பலவீனமடைந்தால், இளம் வயதிலே அவை ஆட்டம் காண ஆரம்பித்துவிடும்.

இளம்வயதிலே ஏற்படும் பல் கூச்சம், பல் சொத்தையின் அறிகுறி. நீண்டநேரம் இனிப்பு பொருட்கள் பற்களில் தங்குவது, வைரஸ், பாக்டீரியா தொற்று ஏற்படுத்தி, பல்லின் ஆணிவேரையே அசைத்துவிடும்.

நன்றாக மென்று சாப்பிட முடியாத சூழல் ஏற்படலாம். இதனால், செரிமான பிரச்னை ஆரம்பித்து, குடல் சார்ந்த பிற பாதிப்புகளுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிடும் என்கிறார், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பல் மருத்துவத்துறை தலைவர் ஜெய் கைலாஷ்.

''ஒட்டும் வகையிலான சாக்லெட்டுகளை குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால், 5 வயதுக்குள் பற்களில் சொத்தை ஏற்படுவது அதிகரித்துவிட்டது. இது, ஈறு, எலும்புகளை வலுவிழக்க செய்துவிடும். சர்க்கரை பாதிப்பு அதிகமிருப்போருக்கு வாயில் பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ந்து, ஈறுகளில் வீக்கம், ரத்த கசிவை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு இருப்போருக்கு, ஈறுகள் விரைவில் பலமிழந்துவிடும். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை செய்வது அவசியம்,'' என்கிறார் அவர்

Advertisement