கள்ளக்காதலியை கொலை செய்தவர் ஆந்திராவின் ஸ்ரீசைலத்தில் கைது

பெலகாவி: கள்ளக்காதலியை கொலை செய்த நபரை, ஆந்திராவின் ஸ்ரீசைலத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக, பெலகாவி எஸ்.பி., ராமராஜன், நேற்று அளித்த பேட்டி:

பெலகாவி மாவட்டம் அதானி தாலுகாவில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் உள்ள கரும்பு தோட்டத்தில், அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார், கொலையாகி கிடந்தது லீலாவதி பீமப்பா என்பவரின் மகள் சுஜாதா, 34, என்பதை கண்டுபிடித்தனர்.

குடும்ப பிரச்னை காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்த சுஜாதா, அதானியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து வசித்தார். இவருக்கு குமார் கல்லப்பா, 37, என்பவர் அறிமுகமானார். அந்த அறிமுகம் பின்னர் கள்ளத்தொடர்பாக மாறியது.

இவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுஜாதாவை நம்ப வைத்தார். இருவரும் சில ஆண்டாக சேர்ந்து வசித்தனர்.

சுஜாதாவின் பெயரில் இருந்த வீடு மற்றும் நிலத்தை, தன் பெயருக்கு எழுதி தரும்படி குமார் கல்லப்பா நெருக்கடி கொடுத்தார். இதற்கு சம்மதிக்காத சுஜாதா, திருமணமான பின் எழுதி தருவதாக கூறியுள்ளார்.

உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாம் என, குமார் கல்லப்பா கூறிய போது, சுஜாதா தாமதப்படுத்தினார். இவர் தனக்கு துரோகம் செய்வதாக, குமார் கல்லப்பா சந்தேகித்தார்.

சம்பவத்தன்று கடைக்கு சென்று வரலாம் எனக்கூறி ஷினாளா கிராமத்தில் உள்ள, தன் பெற்றோரின் கரும்பு தோட்டத்துக்கு, சுஜாதாவை அழைத்து சென்று, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

கொலை செய்த பின், ஆந்திராவின் ஸ்ரீசைலத்துக்கு சென்றார். இது குறித்து, விசாரணை நடத்திய அதானி போலீசார், பல கோணங்களில் விசாரணை நடத்தி, ஸ்ரீசைலத்திலேயே கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement