மதிப்பூதியம் வழங்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட தன்னார்வலர்கள்

வேலுார் : நிலுவை ஊதியத்தை வழங்க கோரி, வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், அரசு திட்ட தன்னார்வலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.


வேலுார் மாவட்டத்தில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களான 'உங்கள் கனவை சொல்லுங்கள், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், உங்களுடன் ஸ்டாலின் மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்' ஆகிய பணிகளை மேற்கொள்ள, மகளிர் குழு மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், 700 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.நாள் ஒன்றிற்கு, தலா, 30 விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தால், 500 ரூபாய் வழங்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், கடந்த, 45 நாட்களாக தன்னார்வலர்களுக்கு, பணியாற்றியதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த தன்னார்வலர்கள், நேற்று காலை வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
நிலுவையில் உள்ள, 45 நாள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அவர்களிடம், அதிகாரிகள் பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படாததால், அதே பகுதியில் அமர்ந்து தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


பின், தன்னார்வலர்களை வேலுார் கலெக்டர் சுப்புலட்சுமி, சந்தித்து பேசி உரிய தீர்வு காண்பதாக தெரிவித்தார். அதன்பின், அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement