கட்சி சின்னங்களை அழிப்பதில் சுணக்கம் காட்டும் தேர்தல்குழு

1

பொன்னேரி: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கட்சி சின்னங்கள் மற்றும் விளம்பரங்களை அழிப்பதில் தேர்தல் குழு சுணக்கம் காட்டுவது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 23ல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, கடந்த 15 முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. அதன்படி, அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட வேண்டும்.

பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதேசமயம், மின்கம்பங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அழிக்கப்படாமல் உள்ளன. மேலும், சுவர்விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் அரைகுறையாக அகற்றப்பட்டு உள்ளன.

தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் சுணக்கம் காட்டுவது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement