பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு

புதுடில்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, நம் நாட்டில் 'பிரீமியம்' பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2 முதல் 2.35 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

மேற்காசிய பிராந்தியத்தில் கடந்த மூன்று வாரங்களாக போர் நீடிக்கிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே இந்த தாக்குதல் தொடர்கின்றன.

ஈரான் நேற்று முன்தினம் வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களை தாக்கி சேதப்படுத்தியது. இதனால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று, 110 அமெரிக்க டாலரை தாண்டியது.

மேலும், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தி, ஈரானால் முடக்கப்பட்டு உள்ளதால், விலை அதிகரித்த நிலையிலேயே காணப்படுகிறது.

இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்படும் செலவை ஈடு செய்ய நம் நாட்டின் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பிரீமியம் பெட்ரோல் விலையை மட்டும் உயர்த்தியுள்ளன.

வாகன இன்ஜின்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் தரம் உயர்த்தப்பட்ட பெட்ரோல், பிரீமியம் பெட்ரோல் என்று அழைக்கப் படுகிறது.

''நாட்டின் மொத்த பெட்ரோல் விற்பனையில் 3- முதல் 4 சதவீதம் மட்டுமே பிரீமியம் பெட்ரோல் விற்பனை ஆகிறது,'' என, எரிசக்தி துறை இணை செயலர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.

பிரீமியம் பெட்ரோலை, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 'பவர்' என்ற பெயரிலும், பாரத் பெட்ரோலியம் 'ஸ்பீட்' என்ற பெயரிலும், இந்தியன் ஆயில் நிறுவனம் 'எக்ஸ்.பி., 95' என்ற பெயரிலும் விற்பனை செய்கின்றன.

Advertisement