உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி

23


நமது நிருபர்



உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.



ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்குத் தளர்த்தியது. அமெரிக்கா அனுமதியால் கப்பல்களில் உள்ள 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இது குறித்து அமெரிக்க கருவூலச் செயலாளர் பெசென்ட் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உலகளாவிய பயங்கரவாதத்தின் தலையாக ஈரான் விளங்குகிறது. அதிபர் டிரம்பின் 'ஆபரேஷன் எபிக் பியூரி' நடவடிக்கை மூலம், நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக இந்த முக்கியமான போராட்டத்தில் வெற்றி பெற்று வருகிறோம்.



உலகளாவிய எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான ஈரானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, உலகிற்கான எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கவும், உலகளாவிய விநியோகத்தை வலுப்படுத்தவும், சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் ராணுவ வலிமையைத் தொடர்ந்து பயன்படுத்தும்.


தற்போது கடலில் தேங்கியுள்ள ஈரானின் எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கும், குறுகிய கால அங்கீகாரத்தை வழங்கியது. உலகிற்கான இந்த தற்போதைய விநியோகத்தால், 14 கோடி பீப்பாய் கச்சாய் எண்ணெயை உலகச் சந்தைகளுக்கு விரைவாகக் கொண்டு வரும். இதுவரை, டிரம்ப் நிர்வாகம் 440 மில்லியன் கூடுதல் பீப்பாய் எண்ணெயை உலகச் சந்தைக்குக் கொண்டுவரப் பணியாற்றி வருகிறது. அதிபர் டிரம்பின் எரிசக்தி ஆதரவுத் திட்டம், அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை உயர்த்தியுள்ளது.


இது எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தி, எரிபொருள் செலவுகளையும் குறைத்துள்ளது. இப்போது ஏற்படும் எந்தவொரு குறுகிய கால இடையூறும் இறுதியில் அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பொருளாதார ஆதாயங்களாக மாறும். இவ்வாறு பெசென்ட் கூறியுள்ளார்.

Advertisement