மோதலில் கைதான 24 மீனவர்கள் நிபந்தனை ஜாமினில் விடுதலை

புதுப்பட்டினம், கல்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 மீனவர்கள், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

கல்பாக்கம் அணுசக்தி துறை அருகில் உள்ள, புதுப்பட்டினம் குப்பம், வாயலுார் உய்யாலிகுப்பம் ஆகிய மீனவர் குப்பங்களின் எல்லை பகுதி, எந்த குப்பத்திற்கு உரியது என்பது தொடர்பாக, இரண்டு பகுதியினர் இடையே, 2024 முதல் மோதல் நீடித்து வருகிறது.

இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண கருதி, உய்யாலிகுப்பம் பகுதியினர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளது.

இரண்டு தரப்பினரும், கடந்த பிப்., 1ம், 15ம் தேதிகளில், சர்ச் பகுதி வழியாக, உத்சவ பால்குட ஊர்வலம் செல்ல முடிவெடுத்தது, எதிர் தரப்பினர் எதிர்த்ததால் தடைபட்டது. பின் மோதலும் ஏற்பட்டு, 15ம், 16ம் தேதிகளில் கலவரத்தில் தாக்கி கொண்டனர்.

கல்பாக்கம் போலீசார், இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து, இரு தரப்பிலும், 12 பேரை கைது செய்து, வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர்.

புதுப்பட்டினம் மீனவர்கள், கடந்த 18ம் தேதியும், உய்யாலிகுப்பம் மீனவர்கள் நேற்று முன்தினம் என, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement