சென்னை சுங்கத்துறை அணி சீனியர் கால்பந்தில் வெற்றி

சென்னை: சென்னையில் நடந்து வரும் ஆடவருக்கான சீனியர் பிரிவு கால்பந்து போட்டியில், சென்னை சுங்கத்துறை அணி, ஆக்டோபஸ் எப்.சி., அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

சென்னை கால்பந்து சங்கம் சார்பில், ஆடவருக்கான சீனியர் கால்பந்து போட்டி, பெரியமேடு கண்ணப்பர் திடல் மைதானத்தில் நடந்து வருகிறது. 15க்கும் அதிகமான சென்னை மாவட்ட கிளப் அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், சென்னை சுங்கத்துறை அணி, ஆக்டோபஸ் எப்.சி., அணியை எதிர்த்து போட்டியிட்டது.

விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் அசாத்திய திறனை வெளிப்படுத்திய சென்னை சுங்கத் துறை அணி, அடுத்தடுத்து கோல்களை குவித்தது.

 அஜய் 16வது நிமிடத்தில், நந்தகுமார் 41 மற்றும் 45வது நிமிடங்களில், ஸ்ரீராம் 72வது நிமிடத்தில், திவாகர் 89வது நிமிடத்தில், ஸ்ரீநாத் 90வது நிமிடத்தில், கோல் அடித்து அசத்தினர். முடிவில், சென்னை சுங்கத்துறை அணி 6 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Advertisement