பறக்கும் படை சோதனையில் 2 கிலோ கஞ்சா, பணம் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, காரில் எடுத்துச் சென்ற 1.22 லட்சம் ரூபாய் மற்றும் தனியார் பேருந்தில் கடத்தி செல்லப்பட்ட கஞ்சாவை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் அருகே வெங்களத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். பிச்சாட்டூரில் உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம், சத்தியவேட்டில் உரக்கடைகளில் பணம் வசூல் செய்துவிட்டு, ஊத்துக்கோட்டைக்கு காரில் சென்றார்.

பின், அங்கிருந்து பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பாலவாக்கம் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், மோகன் எடுத்துச் சென்ற 1.22 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். பணத்தை கும்மிடிப்பூண்டி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் நெடுஞ்சாலையில், புதுார்மேடு அருகே நேற்று காலை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோளிங்கரில் இருந்து பெங்களூருக்கு சென்ற தனியார் பேருந்தை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

இதில், பேருந்தில் இருந்த பயணி ஒருவர் வைத்திருந்த பையில், 1.90 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்ய பறக்கும் படையினர், ஆர்.கே.பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், கஞ்சாவை கடத்தி சென்றவர், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுனில், 31, என தெரியவந்தது. சுனிலை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement