பறக்கும் படையினர் சோதனை நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் நெடுஞ்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டு வருவதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ல் நடைபெற உள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் தேர்தல் நடைமுறைகள் உடனே அமலுக்கு வந்தன. தமிழகம் முழுதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, மூன்று ஷிப்டுகளில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்டலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதுார் சட்டபை தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அரக்கோணம் நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி வாகன சோதனை மேற்கொண்டதால், அவ்வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்பட்டனர்.

இவ்வாறு நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் வாகன சோதனை மேற்கொள்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது என, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள், வாகன சோதனையை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் மேற்கொள்ள வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement