பைபாஸ் சந்திப்புகளில் ரவுண்டானா அவசியம்

கம்பம்: தேனி மாவட்டத்தில் பைபாஸ் சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி வரை தேசிய நெடுஞ்சாலை எண் 183 ன் கீழ் கொண்டுவரப்பட்டு, இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய ஊர்களில் பைபாஸ் அமைக்கப்பட்டுள்ளது.

- ஒவ்வொரு பைபாஸ் ரோட்டிலும் ஆரம்பம் மற்றும் முடியும் இடங்களில் தினமும் ஏதாவது ஒரு வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் பைபாஸ் சந்திப்புக்களில், ஊருக்குள் வாகனங்கள் செல்ல 3 ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான வரைபடங்களோ, சிக்னல் அல்லது எந்த வாகனம் எந்த பாதையில் செல்ல வேண்டும் என்ற வழிகாட்டுதல் கிடையாது.

கிராம பகுதிகளாக இருப்பதால், பைபாஸ் சந்திப்புக்களில் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த பைபாஸ் சந்திப்புகளில் குறிப்பாக உத்தமபாளையம் பைபாசில் தென்னஞ்சாலை, கோகிலாபுரம் விலக்கு, அனுமந்தன்பட்டி விலக்கு. சின்னமனூர் பைபாசில் நுழையும் இரண்டு சந்திப்புக்கள் மற்றும் மார்க்கையன்கோட்டை சந்திப்பு ஆகிய இடங்கள். கம்பம் பைபாசிலும் ரவுண்டானா அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கும்பட்சத்தில் விபத்துக்கள் தவிர்க்கப்படும். தற்போது தேனியில், போடி விலக்கில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது . அதே போன்று அனைத்து பைபாஸ் சந்திப்புக்களிலும் ரவுண்டானா அமைத்தால் விபத்துக்கள் ஏற்படாது என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement