சறுக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அச்சம்

திருப்பூர்:இரவும், பகலும் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கும், முதலிபாளையம் - கூலிபாளையம் பாலத்தில் சாலை பாதி வரை சேதமாகி இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.



திருமுருகன்பூண்டி, நெருப்பெரிச்சல், வாவிபாளையம், மண்ணரை பகுதியை சேர்ந்தவர், நல்லுார், முதலிபாளையம், சிட்கோ, மாணிக்காபுரம், ஹவுசிங்யூனிட் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு சாலையாக கூலிபாளையம் நொய்யல் பாலம் - முதலிபாளையம் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் பாதாள சாக்கடை குழாய், கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடவில்லை.



குறிப்பாக, பாலத்தில் இருந்து வாகனங்கள் முதலிபாளையத்துக்கு திரும்பும் வழியில், வளைவில் பாதி தார் சாலை மட்டுமே உள்ளது. வளைவில் திரும்பும் போது தாழ்வான இடம் என்பதால், வாகன ஓட்டிகள் கவனிப்பதில்லை. தினசரி ஒரு விபத்து நடந்து விடுகிறது. புதியதாக வருபவர்கள் சறுக்கி விழுந்து, படுகாயமடைகின்றனர். பெரும் விபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறையினர் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு.

Advertisement