தேனி அறிவுசார் மையத்திற்கு கணினி வாங்கும் பணி முடக்கம்

தேனி: தேனி அறிவுசார் மையத்திற்கு 8 கணினிகள் வாங்க நகராட்சி கூட்டத்தில் சில மாதங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியும் கணினிகள் இதுவரை வாங்காத நிலை உள்ளது.

தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் ரூ.2கோடி செலவில் அறிவுசார் மையம் செயல்படுகிறது. அங்கு சுமார் 3 ஆயிரம் புத்தகங்கள், நாளிதழ்களுடன் அமைதியான சூழல் உள்ளது. பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் தினமும் வந்து படித்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்துள்ளதால் பெரியகுளம், ஆண்டிபட்டி, சின்னமனுார், தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் இருந்தும் படிக்க வருகிறார்கள். படிப்பவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும் 8 கணினிகள் அறிவுசார் மையத்திற்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 6 மாதங்களுக்கு முன் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

ஆனால், இதுவரை அறிவுசார் மையத்தில் கணினி கொண்டு வரப்படவில்லை. படிக்க வருபவர்கள் கட்டணம் செலுத்தி தனியார் கடைகள் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். அறிவுசார் மையத்திற்கு கணினி வசதி செய்ய நகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாசகர்கள் எதிர்பார்பாக உள்ளது.

Advertisement