சத்துணவு வழங்குவதில் முறைகேடு: வாலாஜாபாத் அரசு நிதி உதவி பள்ளி மீது குற்றச்சாட்டு

வாலாஜாபாத்:வாலாஜாபாதில் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடந்து வருவதாக புகார் எழும்பி உள்ளது.

வாலாஜாபாத் பேரூராட்சி, நேரு நகரில் அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. இந்தப் பள்ளியில், 290 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் சமூக நலத்துறை சார்பில் சத்துணவுக்கான நிதி விடுவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்களுக்கு மதியம் வழங்குகின்ற சத்துணவுக்கான உணவுப் பொருட்கள் பதுக்கல் செய்யப்பட்டு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் சிலர் கூறியதாவது:

பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களில், நூற்றுக்கும் குறைவான மாணவ - மாணவியர் மட்டுமே மதிய சத்துணவை உட்கொள்கின்றனர். மீதமுள்ள மாணவ - மாணவியர் மதியத்திற்கு வீட்டில் இருந்து உணவு கொண்டு வருகின்றனர்.

எனினும், சத்துணவு திட்டத்தின் கீழ் அனைத்து மாணவ - மாணவியரும் பயன்பெறுவதாக உணவுப் பொருட்கள் குறிப்பேட்டில் பதிவு செய்து நிதி பெறுகின்றனர்.

சத்துணவு பெறாத மாணவர்களுக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மண்டல சத்துணவுத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'வாலாஜாபாத் நேரு நகர் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக சமீபத்தில் புகார் வந்துள்ளது. அதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement