ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மவுண்ட்பார்க் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு

தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி முன்னாள் மாணவர் சேஷன், 29. இவர், ஐ.ஏ.எஸ்., தேர்வில் அகில இந்திய அளவில் 197 வது ரேங்கில் தேர்ச்சி பெற்றார். இவரது தந்தை திருக்கோவிலுார் அண்ணா நகரை சேர்ந்த செல்வராஜ். புள்ளியியல் துறை உதவி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சேஷன் கடந்த 2012-13 கல்வியாண்டு தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தொடர்ந்து சென்னை தனியார் கல்லூரியில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்பு முடித்து இன்போசிஸ் நிறுவனத்தில் பணி புரிந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு சென்னை தனியார் கோச்சிங் மையத்தில் சேர்ந்து சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்தார். கடந்த 2025ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 197 வது இடம் பெற்று தேர்ச்சி அடைந்து சாதனை படைத்தார்.

முன்னாள் மாணவர் சேஷனுக்கு தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. மவுண்ட் பார்க் கல்வி குழுமங்களின் தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதனை படைத்த சேஷனை பள்ளி தாளாளர் மணிமாறன் பாராட்டி பேசியதாவது;

கிராம பகுதிகளை சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் கல்வி உயர்வுக்கு மவுண்ட் பார்க் பள்ளி தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.

இங்கு படித்த மாணவர்கள் பலரும் மருத்துவராகவும், பொறியாளராகவும், பல்வேறு துறையில் உயர் பதவியில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் முதன் முறையாக அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்திற்கும், நமது பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதேபோல் நமது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் சாதனை மாணவர்களாக உருவாக வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து முன்னாள் மாணவர் சேஷனுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் கலியபெருமாள் நன்றி கூறினார்.

Advertisement