'மஹா பெரியவர் வாழ்க்கை நமக்கு ஒரு லைப் ப்ளூபிரின்ட்'

சென்னை: ''காஞ்சி மஹா பெரியவரின் வாழ்க்கை தத்துவம், நம் அனைவருக்கும் ஒரு லைப் ப்ளூபிரின்ட்,'' என, 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குநர் ரா.லட்சுமிபதி தெரிவித்தார்.

'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' சார்பில், எழுத்தாளர் ராம.ரவிச்சந்திரன் எழுதிய, 'ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமி மதுரமாலை' புத்தகம் வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நேற்று நடந்தது.

'தினமலர்' நாளிதழ் இணை இயக்குநர் ரா.லட்சுமிபதி புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பெற்றுக் கொண்டார்.

விழாவில், ரா.லட்சுமிபதி பேசியதாவது:

'தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்' சார்பில், தொடர்ச்சியாக ஆன்மிக புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம். துவக்கத்தில் ஆன்மிக மலரில் உள்ள கதைகளை வெளியிட்டோம். பின், 'பச்சைப்புடவைக்காரி' என்ற தொடரை வெளியிட, அது வாசகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து, மஹா பெரியவரின் புத்தகங்களை வெளியிட்டு வந்தோம்.

அந்த வரிசையில், தற்போது எழுத்தாளர் ராம.ரவிச்சந்திரன் எழுதியுள்ள, 'ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்வாமி மதுரமாலை' என்ற ஆன்மிக புத்தகத்தை வெளியிட்டு உள்ளோம். இதில், மஹா பெரியவரின், 100 ஆண்டு கால வாழ்க்கை வரலாறு, கவிதை நயத்தில் இடம் பெற்றுள்ளது.

இதை, மனிதன் வாழ்வதற்கான கையேடாக நினைக்க வேண்டும். ரிஷிகள் வாழ்க்கை முறை குறித்த கதைகளை புராணங்களில் படித்துள்ளோம். ஆனால், அதை நாம் வாழ்ந்த கால கட்டத்தில், மஹா பெரியவர் வாயிலாக பார்த்துள்ளோம்.

பொதுவாக, குறைவு என்றால் இழப்பு என படித்துள்ளேன். ஆனால், குறைவு என்பது அமைதி என, மஹா பெரியவர் வாழ்ந்து காட்டினார். உணவு, உறைவிடம் என அனைத்திலும் எளிமை வாயிலாக, இனிமை மற்றும் மன அமைதி கண்டவர் மஹா பெரியவர்.

சமைப்பதற்கு முன், ஒரு பிடி அரிசியை எடுத்து அருகில் உள்ள கோவில்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கருத்துகளை போதித்துள்ளார்.

அவர் சொன்ன வழியில் நாம் செயல்பட்டால், இன்று சமூகத்தில் பசி என்பதே இருக்காது. ஏரி, குளம், குட்டைகளின் முக்கியத்துவம் குறித்து, தற்போது நாம் பேசி வருகிறோம்.

ஆனால், அதன் முக்கியத்துவம் குறித்து அன்றே மஹா பெரியவர் சொல்லியுள்ளார். தற்போது நாம் பணம், ஆளுமை திறன் என, எதையோ நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், மஹா பெரியவர், உலக அமைதி என்ற குறிக்கோளுடன், நாடு முழுதும் பாதயாத்திரை சென்றுள்ளார். எனவே, இதை நாம் வெறும் புத்தகம் என நினைக்க வேண்டாம். எளிய வாழ்வு - பெரிய அமைதி என்ற மஹா பெரியவரின் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துரைக்கும், நமக்கான ஒரு 'லைப் ப்ளூபிரின்டாக' பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நல்லி குப்புசாமி, நுாலாசிரியர் ராம.ரவிச்சந்திரன் உட்பட பலர் பேசினர்.

Advertisement