கஞ்சா தகராறில் கூட்டாளி வெட்டிக்கொலை : இருவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கஞ்சா வியாபார தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி பேட்டை தபால்நிலைய பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்ற சுரேஷ் 19; கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது வீடு அருகே நின்றிருந்தபோது, 3 டூவீலர்களில் வந்த 5 பேர் கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பியது.

கஞ்சா தகராறு: பேட்டை பகுதியில் 'கஞ்சா மணி' என அழைக்கப்படும் மணி தொடர்ந்து கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். சுரேஷ் அவரது கூட்டாளியாக இருந்துள்ளார். கஞ்சா வழக்கில் மணி சிறைக்கு சென்றபோது, அவரது மனைவி சரண்யாவுக்கு கஞ்சா வியாபாரம் நடத்த சுரேஷ் உதவி செய்து வந்துள்ளார். பின்னர் கஞ்சா வழக்கில் சரண்யாவும், சுரேஷும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சரண்யாவிடம் பெற்ற கஞ்சாவுக்கான பணத்தை முறையாக வழங்காமல் சுரேஷ் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. தனது மனைவி சிறைக்கு செல்ல சுரேஷே காரணம் என்ற குற்றச்சாட்டில், அவரை பழிவாங்க மணி திட்டமிட்டு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

அண்மையில் சுரேஷ் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்திருந்தார். இதையறிந்த மணி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சுரேஷை வெட்டிக்கொலை செய்தார். இதையடுத்து பேட்டை போலீசார் 'கஞ்சா மணி' மற்றும் அவரது கூட்டாளி முகமது இஸ்மாயில் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடிவருகின்றனர்.

Advertisement