களத்தில் நான்கு பெண்கள் கவனம் பெறும் தாராபுரம்

திருப்பூர்: தாராபுரம் (தனி) தொகுதியில் தி.மு.க. - அ.தி.மு.க., - த.வெ.க. - நாம் தமிழர் என, நான்கு கட்சியிலும் வேட்பாளர்களாக பெண்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கவனம் பெற்றுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதியில், தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட கயல்விழி வென்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் முருகனை தோற்கடித்ததால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்த முறை, சட்டசபை தேர்தலில் தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளராக கயல்விழிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. திருப்பூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணியில் பொறுப்பில் உள்ள டாக்டர் இந்திராணி அறிவிக்கப்பட்டார்.

கடந்த முறை பா.ஜ.வுக்கு இத்தொகுதியை வழங்கிய அ.தி.மு.க., இந்த முறை தானே களம்காண்கிறது. வேட்பாளராக மாவட்ட ஊராட்சி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுசாமியின் மனைவியுமான சத்தியபாமா அறிவிக்கப்பட்டார்.

இத்தொகுதியில் த.வெ.கா. சார்பில் கவுரி சித்ராவும், நாம் தமிழர் கட்சியில் திவ்யாவும் களமிறங்கியுள்ளனர்.

கடந்த சட்டசபை தேர்தலில், இத்தொகுதியில் பா.ஜ. சார்பில் முருகன் போட்டியிட்ட போது, வி.ஐ.பி. தொகுதியானது. தற்போது நான்கு பிரதானக் கட்சிகள் சார்பில், பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளதால், இந்த முறையும் இத்தொகுதி கவனம் பெற்றுள்ளது.

---

இந்திராணி(தி.மு.க.)

சத்தியபாமா(அ.தி.மு.க.)

கவுரி சித்ரா(த.வெ.க.)

திவ்யா(நாம் தமிழர்)

Advertisement