இன்று முதல் மனு தாக்கல் வேட்பாளர்களுக்கு அழைப்பு

கடலுார்: சட்டசபை தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் மனு தாக்கல் செய்யலாம் என, மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு வரும், ஏப்., 23ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வேட்பாளர்கள் இன்று முதல் ஏப்., 6ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம்.

இதில் வரும், 31, மற்றும் ஏப்.1, 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய இயலாது.

வேட்பாளர்கள் அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11:00

மணி முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனுவினை அளிக்கலாம்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் அல்லது இணையதளத்தின் வாயிலாகவும் மனு தாக்கல் செய்யலாம். அஞ்சல் மூலமாகவோ அல்லது பிற நபர்கள் மூலமாகவோ மனு வழங்கக்கூடாது.

வேட்பாளர்களுடன் வேட்பாளர் உட்பட, 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு 100 மீ., எல்லைக்குள், 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

சட்டசபை பொதுத்தேர்தல் வைப்பு தொகையாக பொதுப்பிரிவினர் 10,000 ரூபாய்; எஸ்.சி., எஸ்.டி., வேட்பாளர்கள் 5,000 ரூபாய்; ரொக்கமாக செலுத்த வேண்டும்.

மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement