மொபைல்போன் டவர் அமைக்க செம்புலிவரம் மக்கள் எதிர்ப்பு

சோழவரம்: செம்புலிரவத்தில் மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோழவரம் அடுத்த செம்புலிவரம் மூகாம்பிகை நகரில், குடியிருப்புகளுக்கு அருகே தனியார் மொபைல்போன் டவர் அமைக்கப்படுகிறது. இது, பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், குடியிருப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம், டவர் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்நிலையில், நேற்று குடியிருப்பு மக்கள், கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று, டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தினர். அரசின் உரிய அனுமதி பெற்று டவர் அமைக்கும் பணி நடைபெறுவதாகவும், ஆட்சேபனை தொடர்பாக, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து தீர்வு பெறும் படி அறிவுறுத்தினர். இதை தொடர்ந்து, குடியிருப்பு மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement